Tuesday, February 25, 2014

பட்டினத்தார் பாடல் - எல்லாம் பகை

பட்டினத்தார் பாடல் - எல்லாம் பகை 


நம் நோக்கத்திற்கு தடையாய் இருப்பவர்கள் எல்லோரும் பகை தானே ?

காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்...நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்கள் எல்லோரும் நமக்கு பகையே.

அன்பின் பெயரால், கடமையின் பெயரால், காதலின் பெயரால் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார்கள்.

இவர்களை எல்லாம் கடந்து எப்படி அவனை அடைவது என்று ஏங்குகிறார் பட்டினத்தார்.

ஓர் இரவில் கட்டிய மனைவியை, மகனை, அகன்ற அரசை அனைத்தையும் விடுத்து சென்றான் சித்தார்த்தன்...

மாட மாளிகை, கணக்கில் அடங்கா செல்வம் என்று அனைத்தையும் காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடைவழிக்கே என்ற ஒரு வாக்கியம் கண்டவுடன் விட்டு விட்டு சென்றார் பட்டினத்தார்...

அவரின் பாடல்

தாயும்பகை; கொண்ட பெண்டீர் பெரும்பகை; தன்னுடைய
சேயும்பகை; யுறவோரும் பகை; யிச்செகமும் பகை;
ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கில்! இக்காதலினாற்
தோயுநெஞ்சே, மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே

பொருள்

தாயும்பகை = தாயும் பகை. தாய் பகை அல்ல, தாயும் பகை. உலகிலேயே நம் மீது பாசம் கொண்டவர் என்று சொல்லப்படுபவர் தாய்தான்.

தாயினும் சாலப் பரிந்து என்பார் மணிவாசகர்.

அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே என்பார் வள்ளலார்.

அப்பன் நீ , அம்மை நீ என்பார் அப்பர்.

அந்தத் தாயும் பகை என்கிறார் பட்டினத்தார்.

கொண்ட பெண்டீர் பெரும்பகை = மனைவி பெரும் பகை. ஒரு புறம் அவளின் சுயநலம்.  இன்னொரும் புறம் பிள்ளைகளை காக்க வேண்டுமே என்ற எண்ணம். இவற்றால் கணவனின் நேரத்தை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொள்ளும் மனைவி பெரும் பகை. பட்டினத்தார் சொல்கிறார்.

தன்னுடைய சேயும்பகை = பிள்ளைகளும் பகை. அவர்கள் பெரியவர்களாக ஆகும் வரை நம்மை ஒரு விதம் அசைய விட மாட்டார்கள். வாழ்வில் பெரும் பகுதி அவர்களை ஆளாக்குவதிலேயே போய் விடுகிறது.

யுறவோரும் பகை = உறவோரும் பகை.

யிச்செகமும் பகை = இச் செகமும் பகை. இந்த உலகமே பகை

ஆயும் பொழுதில் = ஆராயும் பொழுதில். உங்களுக்கு இது எல்லாம் பகை என்று தெரியாவிட்டால், இன்னும் சரியாக ஆராயவில்லை என்று அர்த்தம். ஆழ்ந்து ஆராய்ந்து பாருங்கள். அது எப்படி தாய், மனைவி, பிள்ளைகள், உறவு, உலகம் எல்லாம் பகையாக முடியும் என்று கேட்கிறீர்களா ? 

அருஞ்செல்வம் நீங்கில் = அருமையான செல்வம் நீங்கினால் எல்லோரும் பகையே. செல்வம் இருக்கும்  வரை தான் அவர்களின் அன்பும், நட்பும், உறவும், காதலும். செல்வம் நீங்கினால் உண்மை தெரியும்.  நாலு காசு சம்பாதிக்காதவனை மனைவியும், பிள்ளைகளும், உறவும் எப்படி மதிக்கும் ? அவன் உறவு யாருக்கு வேண்டும் ? 

இவர்கள் அனைவருக்கும் வேண்டியது நீங்கள் அல்ல, உங்கள் செல்வம்.

இக்காதலினாற் தோயுநெஞ்சே = இவர்கள் மேல் காதலினால் நாளும் தோய்ந்து கிடக்கும் நெஞ்சே

மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே = திரு மருதுரீல் வாழும் சிவனின் பொன் போன்ற பாதங்களே விடுதலை தரும்.

ஜீரணிக்க கொஞ்சம் கடினம்தான். அது எப்படி என்று சண்டை பிடிக்கத்தான் தோன்றும். "ஆயுங்கால்"....ஆராயுங்கள்.


No comments:

Post a Comment