Wednesday, February 26, 2014

நீத்தல் விண்ணப்பம் - புலனால் அரிப்புண்டு

நீத்தல் விண்ணப்பம் - புலனால் அரிப்புண்டு 




நாங்கூழ் புழு என்று ஒரு புழு  உண்டு.மண் புழு  என்று வைத்துக் கொள்ளுங்களேன். அந்த புழுவை எறும்புகள் சூழ்ந்து கொண்டு அதை கடித்து கடித்து தின்னும். அந்த புழுவால் ஓடவும் முடியாது. எறும்புகளை எதிர்த்து போராடவும் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக, வலி கொண்டு, துடித்து துடித்து சாகும். அந்த எறும்புகளுக்கே இரையாகும்.

அது போல இந்த ஐந்து புலன்கள் என்ற எறும்புகள் நம்மை நாளும் அந்த புழுவை எறும்பு தின்பது போல அரித்து  தின்கின்றன.

என்ன செய்வது என்று அறியாமல் அலைகின்றோம்.

அப்படி தனியாக அலையும் என்னை கை விட்டு விடாதே.

மார்கண்டேயனை அந்த கூற்றுவன் பற்ற வந்த போது உன் மலர் பாதங்களால் கூற்றுவனை உதைத்து அவனை ஒடுங்கப் பண்ணினாய்  நீ.

உணர்வு உள்ளவர்கள் பெறும் பெரியவனே. அடியார்கள் உன்னை விட்டு என்றும் நீங்காத பெருமை உள்ளவனே.

பாடல்

எறும்பிடை நாங்கூழ் என, புலனால் அரிப்புண்டு, அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய்? வெய்ய கூற்று ஒடுங்க,
உறும் கடிப் போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்
பெறும் பதமே, அடியார் பெயராத பெருமையனே.


பொருள் 

எறும்பிடை = எறும்புகளிடையே

நாங்கூழ் = நாங்கூழ் என்ற புழு


என = அகப்பட்டது போல

புலனால் அரிப்புண்டு = புலன்களால் நாளும் அரிக்கப்பட்டு

அலந்த = அலைந்த

வெறும் தமியேனை = ஒன்றும் இல்லாத தனிமையானவனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வெய்ய கூற்று ஒடுங்க = கொடுமையான கூற்றுவன் ஒடுங்கும்படி

உறும் கடிப் போது = அடக்கிய மணம் பொருந்திய மலரை போன்ற திருவடிகளை உடையவனே . போது என்றால் மலர். கடி என்றால் சிறந்த, உயர்ந்த என்று அர்த்தம்

அவையே = அந்த திருவடிகளே

உணர்வு உற்றவர் = ஆழ்ந்த உணர்வு உள்ளவர்கள்

உம்பர் உம்பர் = உயர்ந்தவர்களுக்கு உயர்ந்தவர்கள்

பெறும் பதமே = அடையும் பதமே

அடியார் பெயராத பெருமையனே = அடியார்கள் உன்னை விட்டு என்றும் விலகாத  பெருமை உடையவனே



1 comment:

  1. மிகவும் திடுக்கிட வைக்கும் உவமை. நன்றி.

    ReplyDelete