Monday, February 17, 2014

நீத்தல் விண்ணப்பம் - மெய்ம்மையார் விழுங்கும் அருளே

நீத்தல் விண்ணப்பம் - மெய்ம்மையார் விழுங்கும் அருளே



முந்தைய பாடலை பொருளே என்று முடித்தார். இந்த பாடலை பொருளே என்று  ஆரம்பிக்கிறார்.


"பொருளே, நான் வேறு எங்கு போவேன் உன்னை விட்டு. உன்னை விட்டால் எனக்கு ஒரு புகலிடம் இல்லை. உன் புகழை இகழ்பவர்களுக்கு அச்சம் தருபவனே, என்னை விட்டு விடாதே. உண்மையானவர்கள் விழுங்கும் அருளே. உத்திர கோச மங்கைக்கு அரசே, இருளே. வெளியே. இம்மை மறுமை என்று இரண்டுமாய் இருப்பவனே. "

பாடல்

பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.

பொருள் 

பொருளே = பொருளே. "போற்றி என் வாழ் முதலாகிய பொருளே"

தமியேன் = தனியனாகிய  நான்

புகல் இடமே = புகல் அடையும் இடமே

நின் புகழ் இகழ்வார் = உன் புகழை இகழ்பவர்களுக்கு

வெருளே = அச்சமே

எனை விட்டிடுதி கண்டாய்? = என்னை விட்டு விடாதே

மெய்ம்மையார் = உண்மையானவர்கள்

விழுங்கும் அருளே = விழுங்கும் அருளே

அணி பொழில் = அழகிய சோலைகள் நிறைந்த

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

இருளே = இருளே

வெளியே = வெளிச்சமே

இக = இம்மை

பரம் = மறுமை

ஆகி இருந்தவனே = ஆகிய இரண்டுமாய் இருப்பவனே

அது என்ன அருளை விழுங்கும் அன்பர்கள் ? 

அவ்வளவு ஆர்வம். அவளை கண்ணாலேயே விழுங்கினான் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் அல்லவா. அவளைத் தனக்குள் இருத்திக் கொள்ள விரும்புகிறான். அவளை விட்டு எந்நேரமும் பிரிய மனமில்லை அவனுக்கு. அதற்காக  அவளை வாயில் போட்டு விழுங்கவா முடியும். விழியால் விழுங்கினான். 

அது போல இறைவன் அருளை விழுங்கினார்கள் என்றார். பின்னொரு பாடலில்  "விக்கினேன் வினையுடையேன்" என்பார். 

தாகம் எடுத்தவன், நீரைக் கண்டவன் அவசரம் அவசரமாக பருகத் தலைப் படுவான். கொஞ்சம் கொஞ்சாமாக குடிக்க மாட்டான். அவன் உடலில் ஒவ்வொரு அணுவும்  "நீர் நீர் " என்று தவிக்கும். தண்ணீரைக் கண்டவுடன் அப்படியே எடுத்து விழுங்குவான். அது போல அருள் வேண்டித் தவிப்பவர்கள் அது கிடைத்தவுடன்  எடுத்து விழுங்கினார்கள். 

இருளே வெளியே : இருள் வெளிச்சம் என்பது எல்லாம் குறியீடுகள். ஆன்மீக உலகில்  இருள் என்பது அறியாமை. வெளிச்சம் என்பது ஞானம், அறிவு. 

அவன் எல்லாமாக இருக்கிறான் என்றால் அறியாமையாகவும் இருக்கிறான். 

குழந்தை அப்பாவின் முதுகில் யானை ஏறி விளையாடும். குழந்தைக்குத் தான் தெரியாது. அப்பாவுக்குமா தெரியாது. நானாவது யானையாவது என்று குழந்தையிடம்  சண்டை பிடிப்பது இல்லை. அவரும் யானை போல  நடிப்பார்.வெளியில் இருந்து  பார்த்தால் அப்பாவுக்கு அறிவில்லை என்று தான் தோன்றும். குழந்தையின் மகிழ்ச்சிக்கு அவர் தன் அறிவை சற்று விலக்கி வைத்து   நடிக்கிறார்.

குழந்தை பொம்மை கேட்கும். இந்த பொம்மையில் என்ன இருக்கிறது என்று அப்பா குழந்தையிடம்  கேள்வி கேட்பது இல்லை. 

புலன் இன்பங்கள் நமக்கு பொம்மைகள். அந்த பொம்மை இல்லாமல் குழந்தை வளர முடியாது. 

விளையாடி விட்டு தூக்கி வைத்து விட வேண்டும். 

இறைவன் ஏன் நமக்கு அறியாமையை தந்தான் என்று கேட்க்கக் கூடாது. வளர்ச்சியில் அதுவும் ஒரு படி. 

இருளே வெளியே இக பரமாக இருந்தவனே....


1 comment:

  1. "இறைவன் ஏன் நமக்கு அறியாமையை தந்தான் என்று கேட்க்கக் கூடாது. வளர்ச்சியில் அதுவும் ஒரு படி."

    இந்தக் கருத்தை விழுங்குவது கடினம்.

    ஆனால், என்ன ஒரு அருமையானா விளக்கம்! நன்றி.

    ReplyDelete