Saturday, February 15, 2014

நீத்தல் விண்ணப்பம் - நீ பயப்படாதே

நீத்தல் விண்ணப்பம் - நீ பயப்படாதே 


எதில் எதிலேயோ நமக்கு பயம்.

எதிர் காலம் பற்றி, பிள்ளைகள் பற்றி, கணவன் மனைவி பற்றி, செய்யும் வேலை, நாம் சேமித்து வைத்திருக்கும் செல்வம், அதன் பாதுகாப்பு, நம் ஆரோக்கியம், நம்மைச் சேர்ந்தவர்களின் ஆரோக்கியம் என்று ஆயிரம் பயம்.

இப்படி ஆகி விடுமோ, அப்படி ஆகி விடுமோ என்ற பயம்.

சில நிஜமான பயங்கள் , பல கற்பனையில் உள்ள பயங்கள்....

நம் பயத்தை யார் போக்குவார்?...யாரிடம் போனாலும் அவர்கள் தங்கள் பயங்களோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களிடம் போனால் அவர்கள் தங்கள் பயங்களை நம்மிடம் கொட்டுவார்கள்.

என்ன செய்வது ? யாரிடம் போவது ? பல சமயங்களில் ரொம்பத் தனியாக விடப் பட்டதை போல உணர்வோம் ....

அதைப் போல தவிக்கிறார் மணிவாசகர்...

"பயப்படாதே என்று சொல்ல எனக்கு யாரும் இல்லை. எனக்கு நீ தான் தாயும் தந்தையும். நீ தான் என் பயத்தை நீக்கி எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் " என்று  வேண்டுகிறார்.

பாடல்  

என்னை `அப்பா, அஞ்சல்,' என்பவர் இன்றி, நின்று எய்த்து அலைந்தேன்;
மின்னை ஒப்பாய், விட்டிடுதி கண்டாய்? உவமிக்கின், மெய்யே
உன்னை ஒப்பாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அன்னை ஒப்பாய்; எனக்கு அத்தன் ஒப்பாய்; என் அரும் பொருளே!

பொருள் 


என்னை  = என்னை

`அப்பா, அஞ்சல்,' = பயப்படாதே

என்பவர் இன்றி = என்று சொல்ல யாரும் இன்றி

நின்று = தனித்து நின்று

எய்த்து = தேடி

அலைந்தேன் = அலைந்தேன்

மின்னை ஒப்பாய் = மின்னலை போன்றவனே (ஒளி பொருந்தியவன் )

விட்டிடுதி கண்டாய்? = என்னை விட்டு விடாதே

உவமிக்கின், = உனக்கு உவமை சொல்ல வேண்டும் என்றால்

மெய்யே = உண்மையானவனே

உன்னை ஒப்பாய் = உனக்கு நீயே உவமையானவன்

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

அன்னை ஒப்பாய்; = எனக்கு தாய் போன்றவன் நீ

எனக்கு அத்தன் ஒப்பாய் = எனக்கு தந்தை போன்றவன் நீ

என் அரும் பொருளே! = என்னுடைய சிறந்த பொருளே


பொருள் என்றால் ஏதோ கடையில் வாங்கும் ஒன்று அல்ல. நம் வாழ்வின் முதல் பொருள் அவன்.

திருப்பள்ளி எழுச்சியில் மணிவாசகர் சொல்லுவார்

போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு

ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு, நின் திருவடிதொழுகோம்

சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!

ஏற்று உயர் கொடி உடையாய்! எமை உடையாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!


அபிராமி அந்தாதியில்,  அபிராமி பட்டர் கூறுவார்..உலகில் எல்லா பொருளும் அவள் தான், அந்த பொருள்கள் தரும் இன்பங்களும் அவள் தான்,  

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

2 comments:

  1. இப்படி உருக்கமாகப் பாட வேண்டும் என்றால், அவர் மனதில் எத்தனை உணர்சிகள் இருந்திருக்க வேண்டும்!

    ReplyDelete
  2. A complete surrender in the feets of
    god always bring lot of courage and peace of mind. Excellent poems and thanks for bringing it to us.

    Revathi.

    ReplyDelete