Wednesday, February 5, 2014

நாலடியார் - மலையில் ஆடும் மேகம் போல

நாலடியார் - மலையில்  ஆடும் மேகம் போல 


மேகம்.

அழகழாக தோன்றும். ஒன்று மயில் போல் இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கும்போதே யானை போல் மாறும். சிறிது நேரத்தில் மான் போல மாறும்....இப்படி மாறி மாறி கடைசியில் பிரிந்து சிதறி காணாமல் போகும்.

மனித வாழ்க்கையும் அப்படித்தான்....குழந்தை, சிறுவன்/சிறுமி, வாலிபம், நடு வயது, முதுமை, இறப்பு என்று மாறிக் கொண்டே இருக்கும்.

இளமை மாறிப் போகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இளமை நிலையானது அல்ல.

 இந்த உடம்பு நன்றாக உறுதியாக இருக்கும் போதே இந்த உடல் பெற்ற பயனை அடைந்து விட வேண்டும்.

அப்புறம் செய்யலாம், அப்புறம் படிக்கலாம், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடக்கூடாது...

யாருக்குத் தெரியும் அப்புறம் எப்புறம் வரும் என்று ?

பாடல்

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க ;- யாக்கை
மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.


பொருள் 

யாக்கையை = உடலை

யாப்புடைத்தாப் = நன்றாக, உறுதியாக, ஒரு குறையும் இல்லாமல்

பெற்றவர் = பெற்றவர்கள் . தங்கள் முன் வினைப் பயனாக நல்ல உடலைப் பெற்றவர்கள்

தாம்பெற்ற = தாங்கள் பெற்ற

யாக்கையா லாய  = உடம்பால் பெறக் கூடிய

பயன்கொள்க = பயனை அடைய வேண்டும்

யாக்கை = உடம்பு

மலையாடு மஞ்சுபோல் = மலைமேல் ஆடும் மேகம் போல

தோன்றி = தோன்றி

மற் றாங்கே = மற்றபடி அங்கே

நிலையாது நீத்து விடும் = நிலையாக இல்லாமல் மறைந்து போகும்


1 comment:

  1. "வயசு இருக்கும்போதே அனுபவிச்சுக்கோ" என்று சொல்கிறார்!!

    ReplyDelete