Friday, February 7, 2014

திருவாசகம் - உள்ளத்தில் ஊற்றெடுக்கும் தேன்

திருவாசகம் - உள்ளத்தில் ஊற்றெடுக்கும் தேன்

நம் ஐந்து புலன்களும் நமக்கு இன்பத்தை தருவதாக ஏமாற்றி நம்மைத் துன்பத்தில் தள்ளி  விடுகின்றன.

நல்லா இருக்கும், சாப்பிடு சாப்பிடு என்று நாக்கு தூண்டி, முதலில் இன்பம் தருவது போல தந்தாலும் பின்னாளில் சர்கரை வியாதி, உடல் பருமன் என்று ஆயிரம் துன்பத்தில் நம்மை கொண்டு செலுத்தி விடுகின்றன.

இப்படி புலன்கள் தரும் இன்பத்தில் ஆழ்ந்து இருந்ததனால் உன்னை மறந்து விட்டேன். அதற்காக என்னை கை விட்டு விடாதே. திரு நீறு பூசி ஒளிவிடும் உடலைக் கொண்டவனே என்று இறைவனை வேண்டுகிறார்.

நீத்தல் விண்ணப்பம் என்ற இந்த பதிகம் முழுவதும் நமக்குள் அன்றாடம் நடக்கும் போராட்டங்களை அடிகள் படம் பிடித்து  காட்டுகிறார்.

இந்தப் பாடலில் புலன் இன்பங்களுக்கும், இறைவனை நாடும் நோக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தை விளக்குகிறார்.

பாடல்

மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப, யான் உன் மணி மலர்த் தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய்? வினையேன் மனத்தே
ஊறும் மட்டே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே.

பொருள் 

மாறுபட்டு = என்னில் இருந்து மாறுபட்டு

அஞ்சு = ஏன் ஐந்து புலன்களும்

என்னை வஞ்சிப்ப = என்னை வஞ்சனையைச் செய்ய. நல்லது செய்வதாக தொடங்கி தீயதில் தள்ளி விடும் புலன்கள்.  "மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய" என்பார் அடிகள் சிவபுராணத்தில்

யான்  = நான்

உன் மணி மலர்த் தாள் = உன் மலர் போன்ற திருவடிகளை

வேறுபட்டேனை  = விட்டு வேறுபட்டு நின்றேன்

விடுதி கண்டாய்? = என்னை கை விட்டு விடாதே. புலன் இன்பங்களும் வேண்டும், இறைவன் அருளும் வேண்டும். அல்லாடுகிறார் அடிகள். அதையும்  விட முடியவில்லை. இதையும் விட முடியவில்லை.

வினையேன் மனத்தே = வினை உடையவனாகிய என் மனதில்

ஊறும் மட்டே = ஊற்றாக பொங்கி வரும் தேனே. (மட்டு = தேன் ). இறைவனை நினைத்தால் உள்ளத்தில் உவகைத் தேன் ஊற்றெடுத்து பெருக வேண்டும். பெருகும்.

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

நீறு பட்டே = திரு நீறு அணிந்து

ஒளி காட்டும் = ஒளி விடும்

பொன் மேனி நெடுந்தகையே = பொன்னை போன்ற மேனியைக் கொண்ட பெருமை கொண்டவனே



1 comment:

  1. "வினையேன் மனத்தே ஊறும் மட்டே" என்பது அருமை. நன்றி.

    ReplyDelete