Thursday, March 20, 2014

சுந்தர காண்டம் - 2 - துன்பம் நேர்கையில்

சுந்தர   காண்டம் - துன்பம் நேர்கையில்  



நமக்கு  துன்பம் வந்தால் நாம் என்ன செய்வோம் ?

முதலில், எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று நொந்து கொள்வோம்.

 பின்,  துன்பத்திற்கு யார் யார் எல்லாம் காரணம் என்று மனதுக்கு தோன்றுகிறதோ அவர்களை எல்லாம் திட்டித் தீர்ப்போம்.

பின், இந்த துன்பத்தில் இருந்து விடுபட நமக்கு உதவி செய்யாதவர்கள் மீது கோபம் கொள்வோம்.

பின், எதிலும் எரிச்சல். எதிலும் ஒரு பிடிப்பின்மை. நாட்டமின்மை என்று உலகே அஸ்தமானம் ஆனது போல் இடிந்து போய் உட்கார்ந்து விடுவோம்.

இராமன் என்ன  செய்கிறான்,நமக்கு எப்படி  வழி காட்டுகிறான் என்று பார்ப்போம்:

1. முதலாவது, மனைவியிடம் அன்பாக  இருக்கிறான். அவள் அழகை இரசிக்கிறான். இராஜ்யமே போய் விட்டது என்று இடிந்து போய்  விடவில்லை.

2. இயற்கையை இரசிக்கிறான், மனைவியோடு சேர்ந்து. பணம் போனால் என்ன ? இராஜ்ஜியம் போனால் என்ன ? பதவி போனால் என்ன ? என் அன்பு மனைவி  என்னோடு இருக்கிறாள் என்று உலகை அவளோடு சேர்ந்து இரசிக்கிறான்.

3. மற்றவர்கள் மேல் அன்பாக இருக்கிறான். குகனிடம், சுக்ரீவனிடம், வீடணினிடம்  சகோதர அன்பு  பாராட்டுகிறான்.

4. விருந்தில் கலந்து கொள்கிறான்.

5. மற்றவர்களுக்கு உதவி செய்கிறான்.  நானே துன்பத்தில் இருக்கிறேன், இவர்கள் வேறு என்னிடம் வந்து நை நை என்று ஏதோ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று எரிந்து  விழவில்லை.முடிந்த உதவிகளை செய்கிறான்.

6. துன்பத்தை எதிர்த்து  போராடுகிறான். 

7. கடமைகளைச் செய்கிறான். ஜடாயுவுக்கு நீர் கடன்  செய்தான்.

8. நிதானம் தவறாமல் இருக்கிறான்.

9. பகைவனுக்கும்  அருள்கிறான்.இன்று போய் நாளை வா என்று நிதானமாக இருக்கிறான்.

10. எல்லாம் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறான்....

11. அநீதியை எதிர்த்து போராடுகிறான்.

12. மன்னிக்கிறான்.

துன்பம் வரும். எல்லோர் வாழ்விலும் துன்பம் வரும். துன்பம் வந்தால் எப்படி இருக்க  வேண்டும் என்று வாழ்ந்து காட்டுகிறான் இராமன்.

இத்தனையும் சுந்தர காண்டம் நமக்குச் சொல்லித் தருகிறது.

மிகப் பெரிய துன்பத்தை தாங்கி, போராடி எவ்வாறு இராமன் வாழ்ந்து காட்டினான் என்று   பாடம் நடத்துகிறது சுந்தர காண்டம்.

இனி வரும் பகுதியில் இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சுந்தர காண்டத்தை , நம் வாழ்க்கைக்கு அது எப்படி வழி காட்டும் என்ற கோணத்தில்   சிந்திப்போம்.




No comments:

Post a Comment