Sunday, March 9, 2014

தேவாரம் - முத்து வயல் கரை குவிக்கும்

தேவாரம் - முத்து வயல் கரை குவிக்கும் 


ஞான சம்பந்தர் இள வயதிலேயே ஞானம் பெற்றவர். அவரின் பாடல்களில் இயற்கையை கண்டு வியக்கும் அழகை காணலாம். ஒரு சிறு பிள்ளையைப் போல ஒவ்வொன்றையும் பார்த்து அவர் இரசிப்பதைக் நாம் கண்டு வியக்கலாம்.

அவர் திருவையாருக்கு போகிறார். அங்கே உழவர்கள் உழுவதற்கு என்று வயலுக்குப் போகிறார்கள். ஆனால், அங்குள்ள வயல்கள் உழும் படி இல்லை. அங்கு பாயும் காவிரி ஆறு, கடலில் உள்ள முத்துக்களைக் கொண்டு வந்து வயல் எங்கும் தெளித்து விட்டு சென்றிக்கிறது. எங்கு பார்த்தாலும் முத்தும் பவளமும் சிதறிக் கிடக்கிறது. அப்படிப் பட்ட திருவையாறில் இருக்கும் சிவனே என்று பாடுகிறார்.

பாடல்

அடல் வந்த வானவரை அழித்து உலகு
   தெழித்து உழலும் அரக்கர் கேமான்
மிடல் வந்த இருபதுதோள் நெரியவிரல்
    பணிகொண்டோன் மேவும் கோவில்
நடவந்த உழவர் இது நடவு ஒணா வகை
    பரலாய்த் தென்று துன்று
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல்

   கரை குவிக்கும் கழுமலமே

பொருள் 

அடல் வந்த = போருக்கு வந்த

வானவரை = தேவர்களை

அழித்து = அழித்து

உலகு தெழித்து = உலகை அச்சுறுத்தி 

உழலும் = வாழும்

அரக்கர் கேமான் = அரக்கர்களின் தலைவன்

மிடல் = வலிமை மிக்க

வந்த  இருபதுதோள் = வந்த இருபது தோள்களும் 

நெரிய = நசுங்கும்படி

விரல்     பணிகொண்டோன் = கால் கட்டை விரலால் அழுத்தி அவனை பணிய வைத்த சிவன்

மேவும் கோவில் = வாழும் கோவில்

நடவந்த உழவர் = நடவு செய்ய வந்த உழவர்கள்


 இது நடவு ஒணா வகை = இங்கே நடவு செய்ய முடியாத வகையில்

பரலாய்த் = சிறு சிறு கற்களாய்

தென்று துன்று = இருக்கிறது என்று

கடல் வந்த = கடலில் இருந்து வந்த 

சங்கு ஈன்ற முத்து  = சங்கு ஈன்ற முத்து

வயல் கரை குவிக்கும் = வயல்களின் வரப்புகளில் அவற்றை குவித்து வைக்கும் 

 கழுமலமே = மலத்தை (பாவங்களை) கழுவும் இடமே


1 comment:

  1. ஆறு கடலை நோக்கித்தானே செல்லும்? எப்படி ஒரு ஆறு கடலில் இருந்து முத்துக்களை எடுத்து வர முடியும்?

    ReplyDelete