Sunday, March 9, 2014

நீத்தல் விண்ணப்பம் - மத்தில் அகப்பட்ட தயிர்

நீத்தல் விண்ணப்பம் - மத்தில் அகப்பட்ட தயிர் 


தயிர் கடையும் போது தயிர் மத்தின் இடையில் அகப்பட்டு அங்கும் இங்கும் அலையும். அதுக்கு நிம்மதி கிடையாது. ஒரு மத்து என்றால் அப்படி. அதுவே 5 மத்தாக இருந்தால் எப்படி இருக்கும் ? அந்தத் தயிர் என்ன பாடு படும் ?

அது போல ஐந்து குற்றங்கள் / குறைகள் / மலங்கள் என்பவற்றால் நாம் அலைக் கழிக்கப் படுகிறோம்.

இப்படி துன்பப்படும் என்னை என் குற்றங்களை களைந்து என்னை காப்பாற்று என்று வேண்டுகிறார் மணிவாசகர்.

பாடல்

குலம் களைந்தாய்; களைந்தாய் என்னைக் குற்றம்; கொற்றச் சிலை ஆம்
விலங்கல் எந்தாய், விட்டிடுதி கண்டாய்? பொன்னின் மின்னு கொன்றை
அலங்கல் அம் தாமரை மேனி அப்பா, ஒப்பு இலாதவனே,
மலங்கள் ஐந்தால் சுழல்வன், தயிரில் பொரு மத்து உறவே.

பொருள் 

குலம் களைந்தாய்; = சுற்றத்தாருடன் எனக்கு இருந்த தொடர்பை களைந்தாய்.

களைந்தாய் என்னைக் குற்றம் = என் குற்றங்களை களைந்தாய்

கொற்றச் சிலை ஆம் விலங்கல் = மேரு மலையை வெற்றி பெரும் வில்லைக்

 எந்தாய், = என் தந்தை போன்றவனே

விட்டிடுதி கண்டாய்? = கை விட்டு விடாதே

பொன்னின் = பொன்னைப் போல்

மின்னு  = மின்னும்

கொன்றை = கொன்றை மலரை

அலங்கல் = மாலையாகக் கொண்டவனே

அம் தாமரை மேனி அப்பா = அழகிய தாமரை போன்ற உடலை கொண்டவனே

ஒப்பு இலாதவனே = ஒப்பு இல்லாதவனே

மலங்கள் ஐந்தால் = குற்றங்கள் ஐந்தால்

சுழல்வன் = சுழல்கின்றேன்

தயிரில் பொரு மத்து உறவே = தயிரில் பொருந்திய மத்தைப் போல



No comments:

Post a Comment