Wednesday, April 2, 2014

நீத்தல் விண்ணப்பம் - உன்னை பிரிந்து அஞ்சி

நீத்தல் விண்ணப்பம் - உன்னை பிரிந்து அஞ்சி 


நம் புலன்கள்  தானே, நம்மால் கட்டுப் படுத்த முடியாதா என்று நாம் நினைக்கலாம்.  ஒன்றை கட்டுப் படுத்தினால் இன்னௌன்று வேறு பக்கம் இழுத்துக் கொண்டு ஓடும்.  ஒரு ஆசை போனால் இன்னொரு ஆசை வரும்.

பேராசை எனும் பிணியில் பிணிப்பட்டு என்பார் அருணகிரி.

அவை நம் கட்டுக்குள் இருப்பது இல்லை. நம்மோடு எப்போதும் போர் தொடுக்கின்றன.

அது வேண்டும்,  இது வேண்டும், என்று சதா சர்வ காலமும் நம்மை நச்சரித்துக் கொண்டே இருக்கின்றன.  அவை நம்மை படுத்தும் பாட்டை நாம் அறிந்து கொள்ளாவிட்டால் அவை இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஆடி ஓடி தளர்ந்து போவோம்.

என்னோடு சண்டை பிடிக்கும் புலன் வயப்பட்டு, உன்னை பிரிந்து அஞ்சி நின்றேன். ஒரு புறம் சண்டை போடும் புலன்கள். இன்னொரு புறம் உன் துணை இல்லாத தனிமை. இதற்கு நடுவில், இந்த அழகான பெண்கள். அவர்கள் மேல் உள்ள பற்றையும் விட முடியவில்லை.   சுடர் போல் ஒளி விடுபவனே, சுடுகாட்டுக்கு அரசனே, தொண்டர்களுக்கு அமுதம் போன்றவனே, அணுக முடியாதவனே, என் தனிமையை நீக்கும் துனையாணவனே, என்னை விட்டு விடாதே என்று உருகுகிறார் மணிவாசகர்.

பாடல்

அடர்புல னால்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல்நல் லார்அவர்தம்
விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந் தேஎரியும்
சுடரனை யாய்சுடு காட்டர சேதொழும் பர்க்கமுதே
தொடவரி யாய்தமி யேன்தனி நீக்கும் தனித்துணையே.

கொஞ்சம் சிக்கலான பாடல். சீர் பிரிப்போம்

அடர் புலனால் நின்னை பிரிந்து அஞ்சி அம் சொல் நல்லார்அவர் தம்
விடர் விடலேனை விடுதி கண்டாய் விரிந்தே எரியும்
சுடர் அனையாய் சுடுகாட்டு அரசே தொழும்பர்க்கு அமுதே 
தொடர்வு அரியாய் தமியேன் தனி நீக்கும் தனித் துணையே.



பொருள்


அடர் புலனால் = அடுத்து வருகின்ற புலன்களால்

நின்னை பிரிந்து = உன்னை பிரிந்து (புலன்கள் பின்னால் போய் )

அஞ்சி = அச்சப் பட்டு

அம் சொல் = அழகிய சொல்

நல்லார் = நல்லவர்கள் (நல்ல பெண்கள் )

அவர் தம் = அவர்களின்

விடர் விடலேனை = தொடர்பை விட முடியாதவனை

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

விரிந்தே எரியும் = பரந்து சுடர் விட்டு எரியும்

சுடர் அனையாய் = சுடர் போன்றவனே

சுடுகாட்டு அரசே = சுடு காட்டு அரசே

தொழும்பர்க்கு அமுதே = தொழும் அடியவர்களுக்கு அமுதம் போன்றவனே 

தொடர்வு அரியாய் = தொடர முடியாதவனே, நெருங்க முடியாதவனே

தமியேன் = அடியவனான என்

தனி நீக்கும் = தனிமையை நீக்கும்

தனித் துணையே = ஒப்பற்ற துணையே
.
அவனல்லால் ஒரு துணை இல்லை. 


துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் 
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

என்பார் அபிராமி பட்டர். 

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.


என்பார் அருணகிரி நாதர் 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
  
என்பது நாவுக்கரசர் வாக்கு 

நீங்கள், உங்கள் துணை என்று எதை அல்லது யாரை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ? 

சேர்த்து வைத்த செல்வமும், கணவன் / மனைவி, பிள்ளைகள் எது துணை ?

உன் பற்று அல்லால் ஒரு பற்று அல்லேன் இறைவா கச்சி ஏகம்பனே என்று ஓலமிடுகிறார்  பட்டினத்தார். 


1 comment:

  1. இப்படிப்பட்ட பெரியவராலேயே பெண்ணாசையையும், மற்ற ஆசைகளையும் விட முடியவில்லையே!

    அடி மனதிலிருந்து வரும் பாடல் இது. அவரது தவிப்பை உணர முடிகிறது. அருமை.

    ReplyDelete