Thursday, April 10, 2014

நீத்தல் விண்ணப்பம் - வலையில் சிக்கிய மானிடம் சிக்கியவன்

நீத்தல் விண்ணப்பம் - வலையில் சிக்கிய மானிடம் சிக்கியவன்  


மானின் கண்கள் அழகானவை. பயந்த தன்மையை காட்டுபவை. மருண்ட பார்வை கொண்டவை.

அந்த மான், வலையில் சிக்கிக் கொண்டால், அதன் பார்வை எப்படி இருக்கும் ? மேலும் பயந்து, மேலும் மருட்சியை காட்டும் அல்லவா ?

பெண்களின் கண்கள் அந்த வலையில் அகப்பட்ட மானின் விழியைப் போல இருக்கிறது.

அந்த பார்வை எனும் வலையில் விழுந்தால் அதில் இருந்து வெளியே வர முடியாது.

அப்படிப்பட்ட வலையில் சிக்கிய என்னை கை விட்டு விடாதே - கருணாகரனே, கயிலை மலையின் தலைவா, மலைமகளின் தலைவனே என்று இறைவனை நோக்கி கசிந்து உருகுகிறார் மணிவாசகப் பெருந்தகை

பாடல்

வலைத்தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு,
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய்? வெள் மதியின் ஒற்றைக்
கலைத் தலையாய், கருணாகரனே, கயிலாயம் என்னும்
மலைத் தலைவா, மலையாள் மணவாள, என் வாழ் முதலே.


பொருள்

வலைத்தலை = வலையில் அகப்பட்ட

மான் அன்ன = மான் போன்ற

நோக்கியர் = பார்வை உடைய பெண்கள்

நோக்கின் வலையில்= பார்வை வலை (நோக்கின் வலை என்பது நல்ல சொற் பிரயோகம் )

பட்டு = அகப்பட்டு

மிலைத்து அலைந்தேனை  =  மயங்கி அலைந்தேனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா

 வெள் மதியின் = வெண் மதியின்

ஒற்றைக் கலைத் தலையாய் = பிறையை சூடிய தலைவனே

கருணாகரனே = கருணைக்கு இருப்பிடமாக இருப்பவனே

கயிலாயம் என்னும் மலைத் தலைவா = கைலாயம் என்ற மலைக்குத் தலைவனே

மலையாள் மணவாள = மலை மகளான உமாதேவியின் மணவாளனே

என் வாழ் முதலே = என் வாழ்க்கைக்கு முதலாக இருப்பவனே




1 comment:

  1. மாணிக்க வாசகர் பெண்ணாசை பற்றி இவ்வளவு புலம்பியிருக்கிறாரே!

    ReplyDelete