Saturday, April 12, 2014

அகநானூறு - இதுவோ மற்று நின் செம்மல் ?

அகநானூறு - இதுவோ மற்று நின் செம்மல் ?


பெரிய எரி. பரந்த நீர் பரப்பு.  அதன் மேல் சிலு சிலுவென வீசும் காற்று.

அந்த ஏரியின் கரையில் பெரிய மூங்கில் காடு. அங்குள்ள மூங்கில் மரங்களில் (மூங்கில் ஒரு வகை புல் இனம்) வெள்ளை வெள்ளையாக பூக்கள் பூத்து இருக்கின்றன. அது ஏதோ பஞ்சை எடுத்து ஒட்டி வைத்தது மாதிரி இருக்கிறது.

அந்த மூங்கில்களை ஒட்டி சில பெரிய மரங்கள். அந்த மரங்களில் உள்ள இளம் தளிர்களை காற்று வருடிப் போகிறது.

ஏரியில் உள்ள மீன்களை உண்டு குருகு என்ற பறவை அந்த மர நிழலில் இளைப்பாறுகின்றன. உண்ட மயக்கம் ஒரு  புறம்.தலை வருடும் காற்று மறு பக்கம். சுகமான மர நிழல். அந்த குருகுகள் அப்படியே கண் மூடி உறங்குகின்றன.

ஊருக்குள் கரும்பும் நெல்லும் செழிப்பாக விளைந்திருகின்றன.

அந்த ஊரில் ஒரு விலைமாது, தலைவனைப் பற்றி இகழ்வாகப் பேசிவிட்டு சென்றாள் . அது மட்டும் அல்ல அவனை நோக்கி ஒரு பார்வையை  வீசிவிட்டு,அவன் அணிந்திருந்த மாலையை பறித்துச் சென்றாள் . அவள், தலைவி இருக்கும் வீதி வழியே சென்றாள். இதைத் தலைவி , தலைவனிடம் கூறுகிறாள்.



பெரும்பெயர் மகிழ்ந பேணா தகன்மோ
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட்கொம் பீங்கைத் துய்த்தலைப் புதுவீ
ஈன்ற மரத்தின் இளந்தளிர் வருட
5. ஆர்குரு குறங்கும் நீர்சூழ் 1வளவயற்
கழனிக் கரும்பின் சாய்ப்புறம் ஊர்ந்து
பழன யாமை பசுவெயிற் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர
இதுவோ மற்றுநின் செம்மல் மாண்ட
10. மதியேர் ஒண்ணுதல் வயங்கிழை யொருத்தி
இகழ்ந்த சொல்லுஞ் சொல்லிச் சிவந்த
ஆயிதழ் மழைக்கண் நோயுற நோக்கித்
தண்ணறுங் கமழ்தார் 2பரீஇயினள் நும்மொடு
ஊடினள் சிறுதுனி செய்தெம்
15. மணன்மலி மறுகின் இறந்திசி னோளே.

1 comment:

  1. சொற்பொருள் வேண்டும். தயவுசெய்து ஷாருக.

    ReplyDelete