Saturday, April 5, 2014

நீத்தல் விண்ணப்பம் - உடல் எனும் வலை

நீத்தல் விண்ணப்பம் - உடல் எனும் வலை 


விலங்குகளை வலை வைத்துப் பிடிப்பார்கள். வலையில் மாட்டிக் கொண்ட விலங்குகள்  அதில் இருந்து விடுபட துள்ளும், தவிக்கும், தாவும் என்னென்னவோ செய்யும். அது எவ்வளவு முயற்சி செய்கிறதோ, அந்த அளவு மேலும் வலையில் சிக்கிக் கொள்ளும். வலை வைத்தவன் மனது வைத்தால் ஒழிய அந்த விலங்கு வலையில் இருந்து விடு பட முடியாது.

அது போல

இந்த உடல் என்ற  வலையில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த உடல் தான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த உடலில் உள்ள பொறிகள் நாளும் பலப் பல அனுபவங்கள் மூலம் நான் என்ற எண்ணத்தை மேலும் மேலும் வலுப்  படுத்துகிறது. பின், நான் என்ற அகம்பாவத்தில் இருந்து வெளி வர முடியாமல் தவிக்கிறோம்.

அதைத்தான் மாணிக்க வாசகர் சொல்கிறார் , ஒரு  கணம் கூட இந்த உடம்பு என்ற வலிமையான வலை தரும் துயரை பொறுக்க முடியாது என்கிறார்.

பாடல்


தனித் துணை நீ நிற்க, யான் தருக்கி, தலையால் நடந்த
வினைத் துணையேனை விடுதி கண்டாய்? வினையேனுடைய
மனத் துணையே, என் தன் வாழ் முதலே, எனக்கு எய்ப்பில் வைப்பே,
தினைத்துணையேனும் பொறேன், துயர் ஆக்கையின் திண் வலையே.


பொருள் 

தனித் துணை நீ நிற்க =  தனிச் சிறப்பான துணையான நீ இருக்கும் போது


யான் = நான்

தருக்கி = தலைக் கனம் கொண்டு

தலையால் நடந்த = காலால் நடக்காமல் தலையால் நடந்த

வினைத் துணையேனை = வினைகளையே துணையாகக் கொண்ட  என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வினையேனுடைய = வினை உடையவனான என்

மனத் துணையே = மனதிற்கு துனையாணவனே

என் தன் வாழ் முதலே = என் வாழ்வின் முதலே. (போற்றி என் வாழ் முதலாகிய பொருளே என்பதும் அவர் வாக்கே )

எனக்கு = எனக்கு

எய்ப்பில்= நலிந்த நேரத்தில்

வைப்பே = (கிடைத்த ) சொத்தே

தினைத்துணையேனும் பொறேன் = சிறிது நேரம் கூட பொறுக்க மாட்டேன்

துயர் = துயர் தரும்

ஆக்கையின் = உடம்பின்

திண்  = வலிமையான

வலையே = வலையே 

1 comment:

  1. என்ன ஒரு உருக்கமான பாடல்.

    "தலையால் நடந்தேன்" - அருமையான உருவகம்.

    நன்றி.

    ReplyDelete