Saturday, April 5, 2014

பழமொழி - அப்புறம் படித்துக் கொள்ளலாம்

பழமொழி - அப்புறம் படித்துக் கொள்ளலாம் 


பதினெண் கீழ் கணக்கு நூல்களில் பழமொழி 400 என்ற நூல் உண்டு.

பழ மொழி என்பது அனுபவங்களின் சாரம். பல பேர் அனுபவித்து,  அதை ஒரு விதி போல சொல்லி, சொல்லி நாளடைவில் அது ஒரு நிரந்தர வாக்கியமாக மாறி விடுகிறது.

பழ மொழிகள் நமக்கு வாழ்க்கையை சொல்லித் தரும் அனுபவ பாடங்கள். யாரோ பட்டு , உணர்ந்து நமக்குச் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.

அப்படிப் பட்ட பழ மொழிகளை கடைசி வரியாக கொண்டு, அந்த பழ மொழி சொல்லும் செய்தியை முன் மூன்று அடிகளில் எடுத்து இயம்புவது பழமொழி 400 என்ற இந்த நூல்.

அதில் இருந்து சில பாடல்கள்....

மரம் போக்கி கூலி கொண்டார் இல்லை என்பது பழ மொழி.

 இதற்கு என்ன அர்த்தம் ?  இது என்ன சொல்ல வருகிறது ?


எவ்வளவோ படிக்க வேண்டியது இருக்கிறது. எங்க நேரம் இருக்கு, அப்புறம் படித்துக் கொள்ளலாம் என்று நாளும் நாளும் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

அப்புறம் எப்போது வருமோ தெரியாது.

இளமையில் படித்து விட வேண்டும். பின்னால் படித்துக் கொள்வோம் என்று எதையும் தள்ளிப் போடக் கூடாது.

நெடுஞ்சாலைகளில் போகும் போது சில இடங்களில் சுங்கம் தீர்வை (Excise  Duty , entry tax , toll charges ) போன்றவை  இருக்கும்.வண்டி அந்த இடத்தை கடக்கும் முன் அவற்றை வசூலித்து விட வேண்டும். வண்டியைப் போக விட்டு பின் வசூலித்துக் கொள்ளலாம் என்றால் நடக்காது.

அது போல, படகில் ஏறும்போதே படகு சவாரிக்கான கூலியை வாங்கிவிட வேண்டும். அக்கரையில் கொண்டு சேர்த்தப் பின் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் அக்கறை இல்லாமல் போய் விடுவார்கள் பயணிகள்.

காலாகாலத்தில் படித்து விட வேண்டும்.

பாடல்

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

பொருள் 

ஆற்றும் = வழிப் படுத்தும்

இளமைக்கண் = இளமை காலத்தில்

கற்கலான் = கற்காமல்

மூப்பின்கண் = வயதான காலத்தில்

போற்றும் = படித்துக் கொளல்லாம்

எனவும் புணருமோ = என்று நினைக்கலாமா?

ஆற்றச் = வழியில்

சுரம்போக்கி = செல்ல விட்டு

உல்கு கொண்டார் = தீர்வை (toll , excise ) கொண்டவர்கள்

இல்லையே இல்லை = இல்லவே இல்லை

மரம்போக்கிக் = இங்கே மரம் என்றது மரத்தால் செய்யப்பட்ட படகை. படகில் பயணிகளை அக்கரை சேர்த்த பின் 

கூலிகொண் டார். = கூலி பெற்றவர் யாரும் இல்லை.

தள்ளிப் போடாமல் படியுங்கள்.


இந்த சமுதாயம் படிப்பிற்கு எவ்வளவு முக்கியத்வம் கொடுத்து இருக்கிறது என்று நினைக்கும்  போது பெருமை படாமல் இருக்க முடியவில்லை. 


1 comment: