Wednesday, April 9, 2014

பழமொழி - பொருள் கொடுத்து கொள்ளார் இருள்

பழமொழி - பொருள் கொடுத்து கொள்ளார் இருள் 


இளமையில் படிக்க வேண்டும் என்று சொல்லியாச்சு.

எப்படி படிக்க வேண்டும் என்றும் விளக்கியாகி விட்டது.

எதைப் படிக்க வேண்டும் ? அதைச் சொல்ல வேண்டும் அல்லவா ?

நாம் எதற்காக ஒரு விளக்கை வாங்குவோம்?

அது நல்ல வெளிச்சம்  தரும்.அந்த வெளிச்சத்தில் நாம் மற்ற பொருள்களைத்   தெளிவாக பார்க்கலாம் என்று தானே விளக்கை வாங்குகிறோம்.

இன்றைய நடை முறையில் சொல்வது என்றால், எதற்க்காக பல்பை, டியூப் லைட்டை வாங்குகிறோம் ?

அந்த விளக்கு வெளிச்சம் தராமால், மங்கலாக எரிந்து, அணைந்து அணைந்து எரிந்து கண்ணுக்கு எரிச்சல் ஊட்டும் என்றால் அதை வாங்குவோமா ? அடிக்கடி கெட்டுப் போய் , நமக்கு வேண்டிய நேரத்தில் வெளிச்சம் தராது என்றால் அதை வாங்குவோமா ?

அது போல, வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும், அற நூல்களை, நீதி நூல்களை, பொருள் தேடித் தரும் பயனுள்ள நூல்களை படிக்க வேண்டும். கண்ட குப்பைகளை படிக்கக் கூடாது.

பாடல்

விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கம்இன்(று) என்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்.

பொருள் 

விளக்கு = விளக்கை

விலைகொடுத்துக் = பொருள் கொடுத்து

கோடல் = வாங்குதல்

விளக்குத் = அந்த விளக்கானது

துளக்கம்இன்(று) = குழப்பம் இன்றி

என்றனைத்தும்  = எப்போதும், அனைத்தையும்

தூக்கி விளக்கு = தெளிவாக விளங்கச் செய்யும்  என்று

மருள் படுவதாயின் =  மயக்கம்,குழப்பம் தருவதாக இருந்தால்

 மலைநாட = மலை நாட்டின் அரசனே

என்னை = எதற்கு

பொருள் கொடுத்துக் கொள்ளார் இருள் = விலை கொடுத்து   யாராவது இருளை வாங்குவார்களா ?

இது படிப்புக்கு மட்டும் அல்ல, வாழ்க்கைக்கு பயனில்லாதவற்றை பொருள் கொடுத்து  வாங்குவது மதியீனம்.

சிகரெட், மது, அளவுக்கு அதிகமான உணவு என்று இப்படி எத்தனையோ தேவையில்லாத , பயன்  இல்லாத,துன்பம் தரக் கூடிய பொருள்களை விலை கொடுத்து வாங்கி துன்பப் படுகிறோம்.

சிந்திப்போம்.



3 comments: