Monday, May 19, 2014

இராமாயணம் - சூர்பனகையை அங்கம் குறைப் படச் செய்தது

இராமாயணம் - சூர்பனகையை அங்கம் குறைப் படச் செய்தது 


சூர்பனகை இராமன் மேல் காதல் கொண்டாள் . இராமன் அதை மறுத்திருக்கலாம். அதை விடுத்து அவளோடு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறான். பின்   சீதை வருகிறாள். சூர்பனகை சீதையைப் பார்த்து அவள் அழகை வியக்கிறாள். சீதை இருக்கும் வரை இராமன் தன்னைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டான் என்று எண்ணி  சீதையை பிடித்துச் செல்ல சோலைக்கு வருகிறாள். 

 அவளை இலக்குவன் தண்டிக்கிறான்.

சூர்பனகையை மிரட்டி அனுப்பி  இருக்கலாம். அதை விடுத்து இலக்குவன் செய்தது மிக மிகையான  .செயல்.

என்ன செய்தான் தெரியுமா ?

சூர்பனகையின் முடியை கையில் இழுத்து சுருட்டி, அவளை காலால் எட்டி உதைத்து, தன் சுருள் வாளை உருவி .....

பாடல்  

  'நில் அடீஇ' என, கடுகினன், 
     பெண் என நினைத்தான்; 
வில் எடாது அவள் வயங்கு எரி 
     ஆம் என விரிந்த 
        சில் வல் ஓதியைச் செங் கையில் 
     திருகுறப் பற்றி, 
ஒல்லை ஈர்த்து, உதைத்து, ஒளி 
     கிளர் சுற்று-வாள் உருவி,

பொருள் 

  'நில் அடீஇ' என, = நில் அடி என்று 

கடுகினன் = விரைந்து அவள் பால் சென்றான் 
 
பெண் என நினைத்தான் = அவள் பெண் என்று நினைத்து 
 
வில் எடாது = வில்லை எடுத்துக் கொள்ளாமல்  

அவள் = அவளுடைய 

வயங்கு எரி = கொளுந்து விட்டு எரிகின்ற 

ஆம்  = போல  

என விரிந்த = விரிந்த 
 
சில் வல் ஓதியைச் = சில வலிமையான முடியை 

செங் கையில் =  சிவந்த கையில் 

திருகுறப் பற்றி, = திருகிப் பிடித்து 
  
ஒல்லை ஈர்த்து = வேகமாக இழுத்து 

உதைத்து = உதைத்து 

ஒளி கிளர் = ஒளி விடும் 

சுற்று-வாள் உருவி = சுற்று வாளை உருவி 

என்ன செய்தான் என்று அடுத்த பாடலில் சொல்கிறான்.....

அண்ணியின் மேல் வைத்த பாசம் என்று சொல்வதா, கட்டுக்கு அடங்காத கோபம் என்று சொல்வதா ?

கண நேரக் கோபம் எவ்வளவு பெரிய சிக்கலை உருவாக்கி விட்டது.

எத்தனை பேரைக் துன்பத்திற்கு உள்ளாக்கியது ?

சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி என்றார் வள்ளுவர்.



1 comment:

  1. "பெண் என நினைத்தான்" என்றால், ஏன் ஒரு பெண்ணை இப்படிக் கையாளுகின்றான்? இப்படியா ஒரு பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து, உதைப்பது?!?!?

    ReplyDelete