Thursday, May 29, 2014

கலிங்கத்துப் பரணி - விடுமின் பிடிமின்

கலிங்கத்துப் பரணி - விடுமின் பிடிமின் 


அவனோடு ஊடல் கொண்டு கதவைத் திறக்காமல் இருக்கிறாள் அவள். அவளிடம் கெஞ்சுகிறான் அவன்.

அவர்கள் ஒன்றாக இருக்கும் போது, அவள் ஆடையை அவன்  பற்றுவான்.அப்போது அவள், அய்யோ விடுங்கள் விடுங்கள் என்று மழலை மொழியில் கெஞ்சுவாள் அவனிடம். விடு விடு என்று சொன்னாலும், அந்த இடத்தை விட்டு விலக மாட்டாள். அது என்னவோ, விடாதே, பிடித்துக் கொள் என்று சொல்வது மாதிரி இருக்கிறது அவனுக்கு. உண்மை கூட அதுதானோ என்னவோ.

அவள் அப்படி விலகிச் செல்லாமல் இருப்பது, அவனுக்கு அருள் செய்வது மாதிரி  இருக்கிறதாம்.


பாடல்

விடுமின் எங்கள்துகில் விடுமின் என்றுமுனி
     வெகுளி மென் குதலை துகிலினைப் 
பிடிமின் என்றபொருள் விளைய நின்றருள்செய் 
   பெடைந லீர்கடைகள் திறமினோ.

பொருள்

விடுமின் = விடுங்கள்

எங்கள்துகில் = எங்கள் ஆடைகளை

விடுமின் = விடுங்கள்

என்று = என்று

முனி வெகுளி = கோபித்து (ஊடல்)

மென் = மென்மையான

குதலை = மழலைச் சொல்லால் 

துகிலினைப் = ஆடையை

பிடிமின் = பிடித்து கொள்ளுங்கள்

என்ற பொருள் விளைய = என்ற அர்த்தம் தோன்ற

நின்றருள்செய் = நின்று அருள் செய்யும்

பெடை = அன்னம்

நலீர் = நல்லவர்களே

கடைகள் திறமினோ = கதவுகளை திறவுங்கள்


அந்த அருள் என்ற வார்த்தையை கண்டு நான் அசந்து போனேன்.

தெய்வம் தான் அருள் புரியும். அருள் கிடைத்தால் முக்தி கிடைக்கும். சொர்க்கம் கிடைக்கும்.

அவள் அதைத்தானே தருகிறாள்.

அதுவும் நின்று அருள் செய்யும்.  ஆடையை விடு விடு என்று சொன்னாலும், அவனை விட்டு விலகாமல் அங்கேயே நின்று அவனுக்கு அருள் செய்கிறாள்.

"நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை  என் சொல்வேன்"



2 comments:

  1. இந்த ஆண்-பெண் உறவிலேயே, பெண் வழங்குவதாகவும், ஆண் கொள்வதாகவும்தான் இலக்கியங்கள் சொல்லி வருகின்றன. இந்தப் பாடலில் வரும் அருளும் அப்படித்தான்! அருமையான சொல்!

    ReplyDelete
  2. "எந்த வள்ளலுக்கும் வழங்குவது பெண்மை இல்லையா?" - கர்ணன் படத்தில், "மகாராஜன் உலகை ஆளலாம்" பாடலில் ஒரு வரி!

    ReplyDelete