Thursday, May 8, 2014

இராமாயணம் - நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள்

இராமாயணம் - நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள்


போரில் இறந்து கிடக்கும் இராவணனை காண அவன் மனைவி மண்டோதரி வருகிறாள்.

அவளின் கற்பை சீதையின் கற்புக்கு இணை சொல்வான் கம்பன். அனுமனே மண்டோதரியைப் பார்த்து அவள் சீதையோ ஒரு கணம் திகைத்தான்.

மண்டோதரி கணவனை ஒரு பொழுதும் மறக்காத மனம் படைத்தவள். நினைப்பும் இல்லை, மறதியும் இல்லை.


நினைந்ததும் மறந்ததும் இல்லாத நெஞ்சினள்  .என்கிறான் கம்பன்.

பாடல்

அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார்,
புனைந்த பூங் குழல் விரித்து அரற்றும் பூசலார்,
இனம் தொடர்ந்து உடன் வர, எய்தினாள் என்ப -
நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள். 

பொருள்


அனந்தம் = அநேகம்

நூறாயிரம் = நூறு ஆயிரம்

அரக்கர் மங்கைமார் = அரக்கப் பெண்கள்

புனைந்த பூங் குழல் = முடித்த தலை முடியை

விரித்து = விரித்து

அரற்றும் = அழுது

பூசலார் = வணங்குபவர்கள்  (அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன் கண்ணீர் பூசல் தரும்)


இனம் தொடர்ந்து உடன் வர = அந்த அரக்கியர் என்ற  இனம் தொடர்ந்து கூட வர

எய்தினாள் = இராவணன் இறந்து கிடக்கும் இடத்தை அடைந்தாள்

என்ப = அடைந்தது யார் தெரியுமா ? இது வரை அப்படி வந்தது யார் என்று சொல்லவில்லை.  அடுத்த வரியில் சொல்கிறான்.

நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள் = நினைப்பும் மறப்பும் இல்லாத மனம் கொண்டவள்

எவ்வளவு  உயர்ந்த பெண் ?

கணவன் இன்னொரு பெண்ணை  விரும்பினான் என்று தெரிந்த போதும் அவனை வெறுத்து ஒதுக்கி விடவில்லை. அவனோடு துணை நின்றாள்.

இன்னும் தொடர்ந்து வரும் பாடல்களையும் பார்ப்போம்.



1 comment:

  1. நினைத்தால்தானே மறப்பதற்கு? மறந்தால்தானே நினைப்பதற்கு? ஆகா, என்ன ஒரு சொற்றொடர்! நன்றி.

    ReplyDelete