Tuesday, May 20, 2014

இராமாயணம் - சூர்பனகையின் வலி

இராமாயணம் - சூர்பனகையின் வலி 


மூக்கையும், காதையும், முலையையும் வாளால் அறுத்து எறிந்தால் வலிக்குமா இல்லையா ? அரக்கியாக இருந்தாலும், அவளும் பெண் தானே.

பெண்ணின் மார்பகம் என்பது அவளின் குழந்தைக்கு பாலூட்ட இயற்கை படைத்தது. அதை வாளால் அறுப்பது என்றால் .....

எவ்வளவு வலித்திருக்கும் ?

வாய் திறந்து அழுகிறாள்...அவளின் வலியை, அவமானத்தை, துன்பத்தை கம்பன் பாட்டில் வடிக்கிறான்....

அந்த நேரத்தில் அவள் வாய் திறந்து அலறிய அலறல் அனைத்து திசைகளிலும் சென்றது. அது மட்டும் அல்ல, வானுலகையும் எட்டியது. தேவர்களின் காதை எட்டியது...அவர்கள் காதில் உள்ளே நுழைந்தது...அதற்கு மேல் என்ன சொல்ல ? அவளின் மூக்கில் இருந்து பெருகிய இரத்தம் ஓடி உலகம் அனைத்தையும் நனைத்தது.


பாடல்

அக் கணத்து அவள் வாய் திறந்து
    அரற்றிய அமலை
திக்கு அனைத்தினும் சென்றது;
    தேவர்தம் செவியும்
புக்கது; உற்றது புகல்வது என்?
    மூக்கு எனும் புழையூடு
உக்க சோரியின் ஈரம் உற்று,
    உருகியது உலகம்.

பொருள் 

அக் கணத்து = அந்த நேரத்தில். இலக்குவன் அவளின் (சூர்பனகையின் ) மூக்கையும், காதையும், முலையையும் அரிந்த அந்த நேரத்தில்

அவள் வாய் திறந்து = அவள் வாய் திறந்து

அரற்றிய அமலை = கதறிய ஓசை

திக்கு அனைத்தினும் சென்றது = அனைத்து திசைகளும் சென்றது

தேவர்தம் செவியும் புக்கது;= தேவர்கள் செவியுள்ளும் சென்றது

உற்றது =  நடந்தது

புகல்வது என்? = என்ன சொல்லுவது

மூக்கு எனும்  = மூக்கு என்ற

புழையூடு = துளையின் வழியே

உக்க சோரியின் = வழிந்த இரத்தத்தினால்

ஈரம் உற்று = ஈரம் உற்று

உருகியது உலகம்.= உலகம் உருகியது.  உலகம் அவளுக்காக உருகியது என்று கொள்ளலாம். அல்லது, நனைந்தது என்றும் கொள்ளலாம்.

எவ்வளவு வலித்திருக்கும் ?

பாவம். 

No comments:

Post a Comment