Sunday, May 11, 2014

மண்டோதரி புலம்பல் - இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்!

மண்டோதரி புலம்பல் - இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! 

போரில் இறந்து கிடக்கிறான் இராவணன்.

மண்டோதரி அவன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

அவளால் நம்ப முடியவில்லை. இறந்து கிடப்பது இராவணன் தானா என்று சந்தேகம் வருகிறது அவளுக்கு. இராவனானாவது இறப்பதாவது என்று நினைத்து இருந்தவள் அவள். இறந்து கிடக்கும் இராவணனின் உடலைப் பார்த்த பின்னும் அவளால் நம்ப முடியவில்லை.  மண்ணின் மேல் கிடப்பது என் உயிர் நாயகனின் முகங்கள் தானா ? என்று கேட்கிறாள்.

ஐயோ எனக்கு இப்படி ஒரு அவலம் நேர்ந்து விட்டதே.  என் கணவன் எனக்கு முன்னால் இறந்து விட்டானே. இதுதானா என் கற்பின் பெருமை.

எவ்வளவோ படித்தான், தவம் செய்தான்,  தானம் செய்தான், கடைசியில் இராவணனுக்கு கிடைத்த பரிசு இது தானா ... இப்படி அனாதையாக மண்ணில் கிடக்கிறானே என்று துக்கம் தாளாமல் அழுகிறாள்.....




பாடல்

'அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு அடுத்தவாறு! அரக்கர் வேந்தன் 
பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த  கருத்து அதுவும் பிடித்திலேனோ? 
முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ? படித் தலைய  முகங்கள்தானோ? 
என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! 

பொருள்

'அன்னேயோ! அன்னேயோ! = அம்மா, அம்மா

ஆ, = ஆ

கொடியேற்கு = கொடியவளான எனக்கு

அடுத்தவாறு! = நேர்ந்த கொடுமை என்ன

அரக்கர் வேந்தன் = அரக்கர் வேந்தன் (இராவணன்)


பின்னேயோ, இறப்பது? = அவனுக்கு பின்னாலா நான் இறப்பது ?

முன் பிடித்திருந்த  கருத்து அதுவும் பிடித்திலேனோ? = அவனுக்கு முன் நான் இறக்க வேண்டும் என்று நான் முன்பு நினைத்திருந்த கொள்கையும் 

முன்னேயோ விழுந்ததுவும் = எனக்கு முன்னால் விழுந்தது

முடித் தலையோ? = இவை முடி சூடிய தலைகல்தானா ?

படித் தலைய  முகங்கள்தானோ? = இவை என் ஆருயிர் நாயகனின் தலைகள் தானா ?


என்னேயோ, என்னேயோ, = என்னவோ, என்னவோ

இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ  = இராவணன் முடிந்த முடிவு இதுதானா ?

பாவம்! = பாவம்



1 comment:

  1. முன்னே, பின்னே, முடிந்தது என்று மூன்று வார்த்தைகளை வைத்துக்கொண்டு என்ன பின்னு பின்னுகிறார்!! ஆகா!

    நன்றி.

    ReplyDelete