Tuesday, June 3, 2014

கலிங்கத்துப் பரணி - நிறை கவசமற்று

கலிங்கத்துப் பரணி - நிறை கவசமற்று 


பெண்ணுக்கு அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்று இயற்கை குணங்கள் உண்டு. அவையே அவளுக்குக் காவல். அவளுக்கு கவசம். அந்த கவசத்தை அவள் இழந்து நிற்கும் நேரமும் உண்டு. அதில் அவளுக்கு வருத்தம் இல்லை. மாறாக புன்னகை பூக்கிறாள். அது , அவள் கணவனோடு இருக்கும் நேரம்.  அந்த நேரத்தில் அந்த கவசங்களை சற்று விலக்கி வைத்து விட்டு அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

பாடல்

அவசமுற் றுளம்நெகத்  துயில்நெகப் பவளவாய்
     அணிசிவப்  பறவிழிக் கடைசிவப் புறநிறைக் 
கவசமற்று இளநகைக் களிவரக் களிவரும் 
   கணவரைப் புணருவீர் கடைதிறந் திடுமினோ.

சீர் பிரித்த பின்

அவசம் உற்று உள்ளம் நெகத்  துயில் நெகப் பவளவாய்
அணி சிவப்பு அற விழிக் கடைசிவப்பு உற நிறைக் 
கவச மற்று இளநகைக் களிவரக் களிவரும் 
கணவரைப் புணருவீர் கடைதிறந் திடுமினோ.

பொருள் 

அவசம் = மகிழ்ச்சி

உற்று  = அடைந்து

உள்ளம் நெகத் = உள்ளம் நெகிழ

 துயில் நெகப் = தூக்கம் நெகிழ

பவள வாய் = பவளம் போன்ற வாய்

அணி சிவப்பு அற = இரண்டு இதழ்களும் சிவப்பை இழக்க

விழிக் கடை = விழியின் ஓரம்

சிவப்பு உற = சிவப்பு ஏற 

நிறைக்  = பெண்ணின் நிறையான அச்சம், மடம் போன்ற குணங்கள்

கவச மற்று = கவசம் இல்லாமல்

இளநகைக் = இளமையான புன்னகை

களிவரக் = மகிழ்வோடு வர

களிவரும் = இன்பத்தோடு வரும்

கணவரைப் = கணவரை

புணருவீர் = ஒன்று சேருவீர்

கடைதிறந் திடுமினோ = கதவைத் திறவுங்கள்



1 comment:

  1. ஜொள்ளோ ஜொள்ளு!

    "துகில்" என்றால் "மேலாடை" என்றும் பொருள் உண்டல்லவா? அப்படிப் படித்துப் பாருங்கள். ஜொள்ளு மீட்டர் இன்னும் எகிறும்.

    ReplyDelete