Monday, June 16, 2014

கந்த புராணம் - தர்மம் என்று ஒரு பொருள் உளது

கந்த புராணம் - தர்மம் என்று ஒரு பொருள் உளது 



கச்சியப்ப சிவாசாரியார் அருளியது கந்த புராணம்.

கந்த புராணத்தில், சூரபன்மன் முதலானோருக்கு அவர்களின் தந்தை காசிப முனிவர் பாடம் சொல்லித் தருகிறார்.

தருமம் என்று ஒரு பொருள் உள்ளது என்று என்கிறார்.

நாட்டில் நடக்கும் அநீதிகளைப் பார்க்கும் போது , தர்மம் என்று ஒன்று உளதா என்ற சந்தேகம் நமக்கு அடிக்கடி வரும்.

தர்மம் வெல்லும். தர்மத்தின் வழி நடக்க வேண்டும்...என்றெல்லாம் நமக்குச் சொல்லப் பட்டது.

இருந்தாலும், தர்மம் இல்லாத வழியில் நடப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காண்கிறோம்.

தர்மத்தின் வழியில் நடப்பவர்கள் அப்படி ஒன்றும் வாழ்வில் முன்னேறிய மாதிரி தெரியவில்லை.

இதை எல்லாம் பார்க்கும் போது , நமக்கு பொதுவாக ஒரு சந்தேகம் வரும்.

தர்மம் என்று ஒன்று இருக்கிறதா ? என்று

கச்சியப்பர் அடித்து சொல்கிறார்

தர்மம் என்று ஒன்று ஒரு பொருள் உண்டு என்று.

மேலும்  சொல்வார், அது இம்மை மறுமை என்ற இருமைக்கும் எப்போதும் தாழ்விலாத இன்பத்தை எளிதாகத் தரும். கிடைத்தற்கரிய பொருளை அருகில் வரச்  செய்யும். அந்த தர்மம் என்பது எல்லாவற்றையும் வேற்றுமை நீங்கி ஒருமையுடன் பார்பவர்களுக்கே புலப் படும்.

பாடல்


தருமமென் றொருபொருள் உளது தாவிலா 
இருமையின் இன்பமும் எளிதின் ஆக்குமால் 
அருமையில் வரும்பொரு ளாகும் அன்னதும் 

ஒருமையி னோர்க்கலால் உணர்தற் கொண்ணுமோ

சீர் பிரித்த பின்

தருமம் என்று ஒரு பொருள் உளது தாழ்வு இல்லாத 
இருமையின் இன்பமும் எளிதின் ஆக்கும்
அருமையில் வரும் பொருளாகும் அன்னதும் 
ஒருமையினோர்க்கு அல்லால் உணர்தற்கு ஒண்ணுமோ ?


பொருள்

தருமம் என்று ஒரு பொருள் உளது = தருமம் என்ற ஒரு பொருள் உள்ளது. அதில் சந்தேகம் இல்லை.


தாழ்வு இல்லாத = ஒரு போதும் தாழ்வு இல்லாத

இருமையின் = இந்த பிறவி, மறு பிறவி என்ற இரண்டு பிறவிக்கும்

இன்பமும் எளிதின் ஆக்கும் = இன்பத்தையும் எளிதாக்கித் தரும்

அருமையில் வரும் பொருளாகும் = எளிதில் கிடைக்கதனவற்றையும் கிடைக்கச் செய்யும்

அன்னதும் =அப்பேற்பட்ட தர்மம்

ஒருமையினோர்க்கு அல்லால் = வேறுபாடுகள் ஒழித்து, ஒன்றிய காட்சி கொண்டவர்களைத் தவிர மற்றவர்கள்

உணர்தற்கு ஒண்ணுமோ ? = உணர முடியுமோ ?

தர்மம் இருக்கிறது. இருக்கும். 

தர்மத்தை நிலை நிறுத்த ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிக்கிறேன் என்கிறான்  கண்ணன். 

தர்மத்தின் வழி நடக்காதவர்களை அந்த தர்மமே அழிக்கும். 

என்பில் அதனை வெயில் போலக் காயுமே அன்பில் அதனை அறம் என்றார் வள்ளுவர்.  

அற வழியில் நடக்காதவர்கள் வெற்றி பெற்றவர்களைப் போலத் தோன்றினாலும், அவர்கள் அழிக்கப் படுவார்கள். 

இது நமது இலக்கியங்கள் மீண்டும் மீண்டும் சொல்லும் தத்துவம். 

நமது இலக்கியங்கள் ஆழமாக நம்பிய தத்துவம். 

நாமும் நம்புவோமே 


1 comment:

  1. தமிழில் "மனம் ஒன்று பட்டவர்" என்று படித்த நினைவு. "ஒருமையினோர்க்கு அல்லால்" என்றால் அதுதானோ? மனம் ஒன்று பட்டவர் என்றால், எதில் ஒன்று பட வேண்டும்?

    ReplyDelete