Friday, June 20, 2014

இராமாயணம் - பேசாத கிளியும் பாடாத குயிலும்

இராமாயணம் - பேசாத கிளியும் பாடாத குயிலும் 


இடம் மாறினால் மனம் மாறுமா ? சீதையின் நினைவால் வாடிய இராவணன் அரண்மனையை விட்டு பூஞ்சோலை அடைந்தான்.

அவன் காமம் அவனை விட்டு போவதாக இல்லை.

அந்த சோலையில் அவனுக்கு அமைதி கிடைத்ததா ?

அங்கு அவன் பட்ட அவஸ்த்தையை கம்பர் விவரிக்கிறார்....


அந்த சோலையில் குயில்களும், கிளிகளும், அன்னங்களும் உண்டு. அவை இனிமையாக பேச மற்றும் பாடக் கூடியவை. இராவணன் இருக்கும் நிலையை பார்த்து, எங்கே வாய் திறந்தால் அவன் கோவித்துக் கொள்வானோ என்று அவைகளும் வாய் மூடி மெளனமாக இருந்தன.


பாடல்

கனிகளின், மலரின் வந்த
    கள் உண்டு, களிகொள் அன்னம்,
வனிதையர் மழலை இன்சொல்
    கிள்ளையும், குயிலும், வண்டும்,
இனியன மிழற்றுகின்ற யாவையும்,
    ‘இலங்கை வேந்தன்
முனியும் ‘என்று அவிந்த வாய,
    மூங்கையர் போன்ற அன்றே.

பொருள்

கனிகளின் = கனிகளில்

மலரின் = மலர்களில்

வந்த = இருந்து வந்த

கள் உண்டு = தேனை உண்டு

களிகொள் = இன்பம் கொண்ட

அன்னம் = அன்னப் பறவைகள்

வனிதையர்  = பெண்களின்

மழலை இன்சொல் = குழந்தை போல பேசும் இனிய சொற்களை கொண்ட

கிள்ளையும் = கிளிகளும்

குயிலும் = குயில்களும்

வண்டும் = வண்டுகளும்

இனியன மிழற்றுகின்ற யாவையும் = இனிமையான சப்தம் தரும் எல்லாம்

‘இலங்கை வேந்தன் = இலங்கை வேந்தன்

முனியும் ‘ = கோவிப்பான்

என்று = என்று

அவிந்த வாய = வாயை மூடிக் கொண்டு

மூங்கையர் போன்ற அன்றே = ஊமைகளைப் போல இருந்தன



மலை மேல் ஏறி நின்றாலும் காமம் சுடும் 

நீரில் மூழ்கினாலும் காமம் சுடும். 

இந்த காமத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது ? இதை எப்படி சமாளிப்பது  ?

பின்னால் கம்பர் சொல்கிறார்....




No comments:

Post a Comment