Saturday, June 21, 2014

இராமாயணம் - காலமும் அஞ்சிய காவலன்

இராமாயணம் - காலமும் அஞ்சிய காவலன் 


சூர்பனகை சொல்லக் கேட்டு, சீதையின் மேல் மோகம் கொண்ட இராவணன், தான் இருக்கும் அரண்மனை விட்டு ஒரு சோலை அடைந்தான்.

அது ஒரு குளிர் காலம்.

மன்மதனின் அம்பு பட்டு புண்ணான அவன் நெஞ்சில் வாடைக் காற்றும் பட்டது.

உள்ளே காமத் தீ கொளுந்து விட்டு எரிகிறது. வெளியே வாடைக் காற்று வாட்டுகிறது.

"என்னடா இது காலம் " என்று ஒரு அதட்டு போட்டான்....அவ்வளவுதான், வாடைக் காலம் ஓடிப் போய்விட்டது, வசந்த காலம் வந்தது.

காலமும் அவன் முன் கை கட்டி நின்றது.

பாடல்

பருவத்தால் வாடைவந்த
    பசும்பனி, அநங்கன் வாளி
உருவிப் புக்கு ஒளித்த புண்ணில்
    குளித்தலும், உளைந்து விம்மி,
“இருதுத்தான் யாது அடா? “என்று
    இயம்பினன்; இயம்பலோடும்,
வெருவிப் போய்ச் சிசிரம் நீங்கி,
    வேனில் வந்து இறுத்தது அன்றே.

பொருள் 

பருவத்தால் = பருவ காலத்தால்

வாடை வந்த = வாடைக் காற்று வந்து

பசும்பனி = குளிர்ந்த பனி

அநங்கன் வாளி = மன்மதனின் அம்பு

உருவிப் புக்கு = உடலில் உருவி புகுந்து

ஒளித்த = ஒளிந்து கொண்ட

புண்ணில் = புண்ணில்

குளித்தலும் = நுழைதலும்

உளைந்து = வருந்தி

விம்மி = விம்மி

“இருதுத்தான் யாது அடா?  “ = இருது என்பது உருது, அதாவது பருவகாலம். இது என்ன பருவ காலம் என்று

என்று = என்று

இயம்பினன்; = கேட்டான்

இயம்பலோடும் = அதைக் கேட்டதும்

வெருவிப் போய்ச் = பயந்து போய்

சிசிரம் நீங்கி = அந்த பனிக் காலம் நீங்கி

வேனில் வந்து இறுத்தது அன்றே. = இளவேனில் காலம் வந்தது.

என்ன வந்து என்ன செய்ய ?

காலத்தை கட்டியவனுக்கு காமத்தை கட்டத் தெரியவில்லை.

காலம் அவனை குழந்தையாக்கி தொட்டிலில் போட்டது.

அகில உலகையும் மண்டியிடச் செய்தவன் சீதையின் அழகின் முன் தோற்றுப் போனான்.

அது தோல்வியா என்ன ?



1 comment: