Sunday, June 22, 2014

இராமாயணம் - காம நோய்க்கு மருந்து உண்டா ?

இராமாயணம் - காம நோய்க்கு மருந்து உண்டா ?


காம நோய்க்கு மருந்து உண்டா ?

சீதையின் மேல் காமம் கொண்டான் இராவணன். அரண்மனை பிடிக்காமல் சோலைக்குச் சென்றான். அவனுக்குப் பயந்து அங்குள்ள கிளிகளும், குயில்களும் வாய் மூடி மெளனமாக இருந்தன என்று பார்த்தோம்.

அவன் போட்ட அதட்டலில் வாடைக் காலம் போய் வேனிற் காலம் வந்தது.

வாடை குளிர்ந்தது என்றால் வேனில் காலம் சுடுகிறது.

காமம் மனதில் வந்து விட்டால், காலம் தான் என்ன செய்யும் ?

பாடல்

வன் பணை மரமும், தீயும், 
     மலைகளும் குளிர வாழும் 
மென் பனி எரிந்தது என்றால், 
     வேனிலை விளம்பலாமோ? 
அன்பு எனும் விடம் உண்டாரை 
     ஆற்றலாம் மருந்தும் உண்டோ?- 
இன்பமும் துன்பம்தானும் உள்ளத்தோடு 
     இயைந்த அன்றே?

பொருள்

வன் = உறுதியான

பணை மரமும் = பெரிய மரமும். பணை என்றால் பெரிய. பணைத் தோள்கள் என்றால் பெரிய தோள்கள்

தீயும் மலைகளும் = தீ கொண்ட மலைகளும்

குளிர வாழும் = குளிரும் படி வாழும்

மென் பனி எரிந்தது என்றால் = மென்மையான பனியே எரியும் என்றால்

வேனிலை விளம்பலாமோ? = வேனில் காலத்தை பற்றி என்ன சொல்ல

அன்பு எனும் விடம் உண்டாரை = காமம் என்ற விஷத்தை உண்டவர்களை. இங்கு அன்பு என்பது காமம் என்ற பொருளில் வருகிறது.

ஆற்றலாம் மருந்தும் உண்டோ? = குணப் படுத்தும் மருந்து உண்டா ?

இன்பமும் துன்பம்தானும் = இன்பமும், துன்பமும்

உள்ளத்தோடு இயைந்த அன்றே? = நம் மனதோடு சேர்ந்த ஒன்று

இடமும் (அரண்மனை, சோலை ), காலமும் (வாடைக் காலமும் வேனில் காலமும் ) ஒன்றும் செய்யாது.

இன்பமும் துன்பமும் மனதில் இருந்து வருகிறது.

அறிவும், ஆற்றலும், செல்வமும், அதிகாரமும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் இல்லை. அவை தான் காரணம் என்றால் இராவணன் இன்பமாக இருந்திருக்க வேண்டுமே ? இத்தனையும் இருந்தும் அவன் துன்பப் படுகிறான்.

மனம் தான் காரணம்.

மனம் மாறினால் இன்பமும் துன்பமும் மாறும்.



1 comment:

  1. இன்பமும் துன்பம்தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே? என்ற வரிகள் காமத்துக்கு மட்டும் அல்ல, மற்றவைகளுக்கும் பொருந்தும். நல்ல பாடல். தந்ததற்கு நன்றி.

    ReplyDelete