Monday, June 23, 2014

அடைக்கலப் பத்து - தாழியைப் பாவு தயிர் போல்

அடைக்கலப் பத்து - தாழியைப் பாவு தயிர் போல் 




இறைவன் யார் ? அப்படி ஒருவன் இருக்கிறானா ? இருக்கிறான் என்றால் எங்கே இருக்கிறான் ? அவன் ஆணா , பெண்ணா? அலியா ? உலகில் இவ்வளவு துன்பங்களும் பிரச்சனைகளும் இருக்கிறதே ....இறைவன் என்று ஒருவன் இருந்தால் ஏன் இவ்வளவு துன்பம் ?

இது போல பல கேள்விகள் அவ்வப்போது நம் மனதில் எழுந்து போகின்றன. இதையெல்லாம் அறிந்து கொள்ளலாம் என்றால் எங்கே நேரம் இருக்கிறது ? காலை எழுந்து இரவு படுக்கப் போகும் வரை அந்த வேலை, இந்த வேலை, என்று அங்கும் இங்கும் அலைகிறோம் .

பானையில் தயிரை இட்டு கடையும் போது ஒரு முறை இந்தப் பக்கம் போகும், மறு முறை அந்தப் பக்கம் போகும். ஒரு நிலை இல்லாமல் அலையும். அது போல, மாவடு போன்ற கண்களை கொண்ட பெண்களின் பின்னால் அலைகிறேன். என்று , எப்போது உன்னை வந்து காணப் போகிறேன் தெரியவில்லையே. விட்டு விட்டால் நான் இப்படியே இருந்து அழிந்து போவேன். நான் உன் அடைக்கலம். என்னை காப்பாற்று என்று ஓலமிடுகிறார் மணிவாசகர்.


பாடல்

மாழை, மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட, உடைந்து,
தாழியைப் பாவு தயிர் போல், தளர்ந்தேன்; தட மலர்த் தாள்,
வாழி! எப்போது வந்து, எந் நாள், வணங்குவன் வல் வினையேன்?
ஆழி அப்பா! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.


பொருள்

மாழை = மா போன்ற. அதாவது மாவடு போன்ற

மைப் பாவிய = மை தீட்டிய

கண்ணியர் = கண்களைக் கொண்ட

வன் மத்து இட = வலிமையான மத்தை இட

உடைந்து = உடைந்து

தாழியைப் பாவு தயிர் போல் = தாழியில் (பானையில் ) பரவுகின்ற தயிர் போல

தளர்ந்தேன் = தளர்ந்தேன். கட்டியான தயிர் எப்படி மெலிந்து நீர்த்துப் போகிறதோ அது போல தளர்ந்து போகிறேன்

தட மலர்த் தாள் = சிறந்த மலர் போன்ற பாதங்கள்

வாழி! = வாழ்க

எப்போது வந்து = எப்போது வந்து

எந் நாள் = எந்த நாள்

வணங்குவன் = வணங்குவேன்

வல் வினையேன்? = கொடிய வினை உடைய நான்

ஆழி அப்பா! = கடல் போன்ற அருள் கொண்டவனே

 உடையாய்!  = என்னை உடையவனே

அடியேன் உன் அடைக்கலமே. = அடியேன் , உன் அடைக்கலமே

1 comment:

  1. அவரைப்போட்டுக் காமம் படாத பாடு படுத்தியிருக்கிறது!

    ReplyDelete