Tuesday, June 24, 2014

இராமாயணம் - காமத்தை வெல்ல ....

இராமாயணம் - காமத்தை வெல்ல ....


காமத்தை வெல்ல முடியுமா ?

சீதையின் நினைவால் உழன்ற இராவணன் அரண்மனை விடுத்து ஒரு சோலை சென்று அடைந்தான். அவன் போட்ட அதட்டலில் பருவ காலங்கள் எல்லாம் மாறிப் போயின. என்ன பருவ காலம் வந்து என்ன ? அவன் உள்ளுக்குள் வெந்து கொண்டிருந்தான்.

காமம் இராவணனை மட்டும் வாட்டுவது அல்ல.

காமம் ஒரு உயிர்  சக்தி. அது எல்லா உயிர்களையும் பிடிக்கும். எல்லா உயிர்களுக்கும் அது பிடிக்கும். அது எல்லை மீறும் போது , வரம்பு மீறும் போது எல்லா சிக்கலும் வருகிறது.

காமத்தை எப்படி வெற்றிக் கொள்ளுவது.

காமம் விச்வாமித்திரனைப்  பற்றியது, பராசரரைப் பற்றியது, இந்திரனை, சந்திரனை, வியாரை, சந்தனுவை என்று எல்லோரையும் ஆட்டிப் படைத்தது.

காமத்தை வெல்ல கம்பர் வழி  சொல்லுகிறார்.அந்த ஒரு வழியைத் தவிர வேறு எந்த வழியிலும் காமத்தை வெல்ல முடியாது.

அது - ஒழுக்கம் என்ற வழி. ஒழுக்கத்துடன் நடந்தால் காமத்தை வெல்லலாம்.

பாடல்

கூலத்தார் உலகம் எல்லாம்
    குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க,
நீலத்து ஆர் அரக்கன் மேனி
    நெய் இன்றி எரிந்தது; அன்றே
காலத்தால் வருவது ஒன்றோ?
    காமத்தால் கனலும் வெம் தீச்
சீலத்தால் அவிவது அன்றிச்
    செய்யத்தான் ஆவது உண்டோ?


பொருள் 

கூலத்தார் = கடல் சூழ்ந்த

உலகம் எல்லாம் = இந்த உலகம் எல்லாம்

குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க = குளிரும் வெம்மையும் போயிற்று (இராவணனின் ஆணையினால் )

நீலத்து ஆர்  அரக்கன் மேனி = நீலம் சேர்ந்த அரக்கனின் உடல்

நெய் இன்றி எரிந்தது; = நெய் இன்றி எரிந்தது. காமம் உள்ளே எரிக்கிறது.

அன்றே = அல்லாமல்

காலத்தால் வருவது ஒன்றோ? = அந்த காம வெப்பம் காலத்தால் வருவது இல்லை

காமத்தால் கனலும் வெம் தீச் = காமத்தால் பொங்கும் அந்தத்  தீ

சீலத்தால் = ஒழுக்கத்தால் , நன்னடத்தையால்

அவிவது அன்றிச் = அழியுமே அன்றி

செய்யத்தான் ஆவது உண்டோ? = வேறு எதாலும் ஒன்றும் செய்ய முடியாது.

காமத்தை அறிவால் , ஆற்றலால்,  செல்வத்தால், அழகால்,அதிகாரத்தால் எதனாலும் வெற்றி கொள்ள முடியாது.

இராவணனிடம் இது எல்லாம்  இருந்தது. இருந்தும் அவனால் காமத்தை வெல்ல  முடியவில்லை.அழிந்தான். காரணம் அவனிடம் ஒழுக்கம் இல்லை. 

ஒழுக்கம் ஒன்றே காமத்தை வெல்லும் வழி. 

இந்த ஒரு பாடம் போதாதா ? இராமாயணத்தில் எவ்வளவோ அறிவுரைகள், புத்திமதிகள் இருக்கின்றன. 

இது அவற்றுள் நவரத்தினம்  போன்றது.

 

2 comments:

  1. ஒழுக்கம் என்பது என்ன? திருமணம் முடித்தவர் காமத்தால் வருந்துவது இல்லையா என்ன? அவர்கள் தம் காமத்தை எப்படி வெல்வது?!

    ReplyDelete
  2. மனைவியை தவிர மற்ற வரை நடாதிருப்பத்து

    ReplyDelete