Monday, June 9, 2014

இராமாயணம் - தீமை செய்யாமல் இருக்க

இராமாயணம் - தீமை செய்யாமல் இருக்க 


சீதையைப் பற்றி சூர்பனகை மேலும் இராவணனிடம் கூறுகிறாள்.

பெண்ணின் அன்பும்,  நெருக்கமும், பாசமும் ஆணை தீய வழியில் செல்லாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. அவளின் கோபமும், வஞ்சமும், பேராசையும் அவனை தீய வழியில் செலுத்தவும் கூடியது.

சீதை பக்கத்தில் இருந்தால், நீ அவளிடமே எந்நேரமும் இருப்பாய். வேறு எந்த தீங்கும் செய்ய மாட்டாய் என்கிறாள் சூர்பனகை இராவணனிடம். இராவணனை கட்டிப் போடும் அழகு சீதையின் அழகு.

அழகான, அன்பான பெண் அருகில் இருந்தால், வேறு என்ன வேண்டும் ?


"சீதையின் பேச்சு குழந்தையின் மழலை போல்  இருக்கும்.நீ அவளைப் பெற்றப் பின், உன் செல்வம் அனைத்தையும் அவளுக்கே கொடுத்து விடுவாய். உனக்கு நல்லதையே சொல்லுகிறேன். நீ அப்படி அவளிடம் அடிமை பட்டு கிடப்பதால் உன் அரண்மனையில் உள்ள மற்ற பெண்களை கவனிக்க மாட்டாய். அதனால், நான் அவர்களுக்கு நல்லது செய்யவில்லை "

என்கிறாள்.

பாடல்

'பிள்ளைபோல் பேச்சினாளைப் 
     பெற்றபின், பிழைக்கலாற்றாய்; 
கொள்ளை மா நிதியம் எல்லாம் 
     அவளுக்கே கொடுத்தி; ஐய! 
வள்ளலே! உனக்கு நல்லேன்; 
     மற்று, நின் மனையில் வாழும் 
கிள்ளைபோல் மொழியார்க்கு எல்லாம் 
     கேடு சூழ்கின்றேன் அன்றே?

பொருள்

'பிள்ளைபோல் பேச்சினாளைப் = பிள்ளை போல் மழலை மொழி பேசுபவளை

பெற்றபின், = நீ அடைந்த பின்

 பிழைக்கலாற்றாய் = நீ பிழையே செய்ய மாட்டாய். எப்போதும் அவள் அருகிலேயே இருப்பாய்.  எனவே,வேறு எதுவும் செய்ய மாட்டாய்.

கொள்ளை = கொட்டிக் கிடக்கும்

மா நிதியம் எல்லாம் = பெரிய செல்வங்களை எல்லாம்

அவளுக்கே கொடுத்தி = அவளிடமே கொடுத்து விடுவாய்

ஐய! = ஐயனே

வள்ளலே! = வள்ளலே

உனக்கு நல்லேன் = உனக்கு நான் நல்லது சொல்லுகிறேன்

மற்று = மற்றபடி

நின் மனையில் வாழும் = உன் அரண்மனையில் வாழும்

கிள்ளைபோல் மொழியார்க்கு எல்லாம் = கிளி போல பேசும் பெண்களுக்கு எல்லாம்

கேடு சூழ்கின்றேன் அன்றே? = கெடுதல் செய்கின்றேன்.

இந்த பாட்டில் இரண்டு அர்த்தம் தொனிக்கும் படி கம்பன் கவி புனைந்து  இருக்கிறான்.

"கொள்ளை மா நிதியம் " - கொள்ளை கொள்ளையாக கொட்டிக் கிடக்கும் செல்வங்கள் என்பது ஒரு அர்த்தம்.   கொள்ளை போகப் போகும் செல்வங்கள் என்று இன்னொரு அர்த்தம்.

"நின் மனையில் வாழும் கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம் கேடு   சூழ்கின்றேன் சூழ்கின்றேன் " - நீ எப்போதும் சீதையிடமே இருப்பதால் மற்ற பெண்களை  கவனிக்காமல் விடுவதால் அவர்களுக்கு கேடு என்பது ஒரு அர்த்தம். இராமனிடம் சண்டையிட்டு நீ இறந்து போவாய், அதனால் அவர்களுக்கு  கேடு என்பது இன்னொரு அர்த்தம்.

கேடு வருவதற்கு முன்னே வார்த்தைகள் அப்படி வந்து விழுகின்றன.

எப்போதும் நல்லதே சொல்ல வேண்டும்.

யார் கண்டது , சொல்லியது ஒரு வேளை பலித்து விட்டால் ? சூர்பனகை சொல்லியது   பலித்தது.


1 comment:

  1. இரட்டை அர்த்தம் இனிமை.

    ReplyDelete