Wednesday, June 4, 2014

கோயில் மூத்த திருப்பதிகம் - அழுவது அன்றி வேறு என் செய்வேன் ?

கோயில் மூத்த திருப்பதிகம்  - அழுவது அன்றி வேறு என் செய்வேன் ?


திருவிழா கூட்டத்தில் ஒரு குழந்தை பெற்றோரைத் தவற விட்டு விட்டது. அவர்களை எப்படி அடைவது என்று தெரியவில்லை. ஓ என்று அழுகிறது. அந்த அழுகுரல் கேட்டு அதன் பெற்றோர் வந்து அதனை கண்டு கொள்வார்கள் என்று நினைக்கிறது.

அழுவதைத் தவிர அதற்கு வேறு ஒன்றும் தெரியவில்லை. பெற்றோர்கள் எங்கு இருப்பார்கள், அவர்களை எப்படி அடைவது என்று ஒன்றும் தெரியவில்லை. யாரிடம் போய் கேட்பது ? திகைத்து அழுகிறது குழந்தை.

அந்த குழந்தையைப்  போல அழுகிறேன் என்கிறார் மணிவாசகர்.

"முழு முதலே. எனது ஐந்து புலன்களுக்கும், மூன்று தேவர்களுக்கும், எனக்கும், வாழ்வின் வழி காட்டுபவனே, உன் அடியார்கள் திரண்டு உன்னிடம் வந்து இருக்கிறார்கள்.  எனக்கு எப்போது அருள் தருவாய் என்று நினைத்து அழுவதைத் தவிர வேறு என்ன என்னால் செய்ய முடியும், பொன்னம்பலத்தில் ஆடும் அரசனே"

பாடல்

முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்கும் என்றனக்கும்
வழிமுத லேநின் பழவடி யார்திரள் வான்குழுமிக்
கெழுமுத லேஅருள் தந்திருக் கஇரங் குங்கொல்லோஎன்
றழுமது வேயன்றி மற்றென்செய் கேன்பொன்னம் பலத்தரைசே.

பொருள்

முழு முதலே = முழுவதற்கும் முதலானவனே

ஐம் புலனுக்கும் = ஐந்து புலன்களுக்கும் 

மூவர்க்கும் = மூன்று தேவர்களுக்கும் 

என்றனக்கும் = எனக்கும்

வழி முதலே = வழிக்கு முதலானவனே

நின் = உன்

பழ வடியார் = பழைய அடியார்கள்

திரள் = திரண்டு

வான் குழுமிக் = வானில் குழுமி

கெழுமுத லே = சேர்ந்து இருக்கையில்

அருள் தந்திருக்க = அவர்களுக்கு நீ அருள் தந்து இருக்க

இரங்குங் கொல்லோ = என் மேல் எப்போது இரக்கம் கொள்வாய்

என் றழுமது வேயன்றி = என்று அழுவதுவே அன்றி

மற்றென் செய்கேன் = வேறு என்ன செய்வேன்

பொன்னம் பலத்தரைசே.= பொன் அம்பலத்தில் ஆடும் அரசே

பூஜை, புனஸ்காரம் எல்லாம் அவனை  சென்று அடைய  உதவாது. உதவும் என்றால் மணிவாசகர் ஏன் அழ வேண்டும். பேசாமல் பூஜைகள் செய்து இருக்கலாமே.

அழுதால் உன்னைப் பெறலாமே என்பதும் அவர் வாக்கு



No comments:

Post a Comment