Monday, June 16, 2014

இராமாயணம் - ஆயிரம் தாமரை மொட்டுக்களே

இராமாயணம் - ஆயிரம் தாமரை மொட்டுக்களே 


சூர்பனகை சீதையின் அழகை எல்லாம் சொன்ன பின் , இராவணன் மனம் சீதையின் பால் செல்கிறது.

காமம் அவனை வாட்டுகிறது. காம நோயால் நொந்து போகிறான்.

காதல் (கம்பன் காதல் என்றே சொல்கிறான். காமம் என்று அல்ல) அவன் மனதில் நூறு கோடியாகப் பூத்தது. மஞ்சத்தில் போய் விழுகிறான். எட்டு திசை யானைகளை வென்ற அவன் உடல் தேய்கிறது, உள்ளம் நைகிறது, ஆவி வேகிறது...

காதல் படுத்தும் பாடு

பாடல்


நூக்கல் ஆகலாத காதல் நூறு 
     நூறு கோடி ஆய்ப் 
பூக்க, வாச வாடை வீசு சீத நீர் 
     பொதிந்த மென் 
சேக்கை வீ கரிந்து, திக்கயங்கள் 
     எட்டும் வென்ற தோள், 
ஆக்கை, தேய, உள்ளம் நைய, 
     ஆவி வேவது ஆயினான்.

பொருள்

நூக்கல் ஆகலாத =விட்டு விலக முடியாத

 காதல் = காதல்

நூறு நூறு கோடி ஆய்ப் = நூறு நூறு கோடியாக

பூக்க = அவன் மனதில் பூக்க

வாச = வாசம் கொண்டு

வாடை வீசு = வீசும் வாடைக் காற்று

சீத நீர் = குளிர்ந்த நீர்த் துளிகளைக்

பொதிந்த மென் = கொண்ட மேகங்களால் ஆன

சேக்கை = படுக்கை

வீ = மலர்கள்

கரிந்து = கரிந்து (காமச் சூட்டில் )

திக்கயங்கள் = திக்கு யானைகள் 

எட்டும் வென்ற தோள் = எட்டையும் வென்ற தோள்கள்

ஆக்கை, தேய = கொண்ட அவன் உடல் தேய

உள்ளம் நைய = உள்ளம் நொந்து போக

ஆவி வேவது = ஆவி வேக

ஆயினான் = அவன் மாறினான்

எவ்வளவு பெரிய வீரனையும் காதல்/காமம் உருக்கிப் போடுகிறது.

1 comment:

  1. கண்ணால் கண்டே இராத ஒரு பெண் மேல் இவ்வளவு காதல்/காமம் வர முடியுமா! ஆச்சரியம்தான்.

    ReplyDelete