Saturday, June 14, 2014

தேவாரம் - இன்னும் வேண்டும் இந்த மனிதப் பிறவி

தேவாரம் - இன்னும் வேண்டும் இந்த மனிதப் பிறவி 


இறைவனை தொழுவது இனிமையான ஒன்று என்றால், இறைவனை அறிவது சிறந்தது என்றால் அந்த இனிமையை, அந்த சுகத்தை தரும் இந்த மனிதப் பிறவி சிறந்ததாகத்தானே இருக்க வேண்டும் ?

பின் ஏன் எல்லோரும் இந்த மனிதப் பிறவியை துன்பம் நிறைந்தது என்று அலுத்துக் கொள்கிறார்கள்.

துறவிகள் கூட பிறவி பெரும் கடல், பிறவி என்ற பிணி என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள்.

திருநாவுக்கரசர் சொல்லுக்கிறார்....தில்லையில் உள்ள சிவனை காண்பது எவ்வளவு இன்பம் தரக் கூடியது....அந்த இன்பத்திற்காகவே மீண்டும் மீண்டும் இந்த மனிதப் பிறவி வேண்டும் என்கிறார்.

இறை அனுபவம் இன்பமானது என்றால், அந்த இன்பத்தைத் தரும் மனிதப் பிறப்பும் இனிமையாகத் தானே இருக்க வேண்டும் ?

பாடல்


அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் 
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை 
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற 
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே?

பொருள்

அன்னம் பாலிக்கும் = அன்னம் என்றால் வீடு பேறு , அல்லது சொர்க்கம். சோழ நாடு சோறுடைத்து என்றால் சோழ நாட்டில் சோறு கிடைக்கும் என்று அர்த்தம் அல்ல. அங்கு நிறைய கோவில்கள் உண்டு. அவற்றை தரிசித்தால் வீடு பேறு கிடைக்கும் என்று அர்த்தம். சொர்க்கத்தைத் தரும்

 தில்லைச் சிற்றம்பலம்  = சிதம்பரத்தில் உள்ள சிற்றம்பலத்தில் உள்ள

பொன்னம் பாலிக்கும் = பொன் அம்பலத்தில் இருந்து அருள் பாலிக்கும்

மேலும், = மேலும்

இப் பூமிசை = இந்த பூமியில்

என் நம்பு ஆலிக்கும் = என் அன்பு பெருகும் வண்ணம்

ஆறு கண்டு  = வழி கண்டு

 இன்பு உற = இன்பம் அடைய

இன்னம் பாலிக்குமோ = இன்னும் கிடைக்குமோ, மீண்டும் கிடைக்குமோ

இப் பிறவியே? = இந்தப் பிறவியே



1 comment:

  1. அற்புதமான பதவுரை ஐயா ் திருச்சிற்றம்பலம்

    ReplyDelete