Saturday, June 7, 2014

இராமாயணம் - சீதையின் அழகு - திருமகளும் சேடி ஆக மாட்டாள்

இராமாயணம் - சீதையின் அழகு - திருமகளும் சேடி ஆக மாட்டாள் 


சீதையின் அழகை சூர்பனகை இராவணனிடம் எடுத்துச் சொல்கிறாள்.

அண்ணனின் மனதில் காமத்தை மூட்டுகிறாள் தங்கை. நெருடலான விஷயம்.

அவளின் வலி, அவளின் அவமானம்...அவளை அந்த நிலைக்கு தள்ளியது என்று நினைக்கலாம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இரண்டு பெண் பாத்திரங்கள் இராமாயணக் கதையை நகர்த்த உதவுகின்றன. ஒன்று கூனி, மற்றொன்று சூர்பனகை.

கூனி , இராமனை காட்டுக்கு அனுப்பினாள் .

காட்டுக்கு வந்த இராமனை இலங்கைக்கு வரவழைத்தாள் சூர்பனகை.

இதுவும் ஒரு புறம் இருக்கட்டும்....


நாம் எத்தனையோ இலக்கியங்களில் , சினிமா பாடல்களில், அயல் நாட்டு இலக்கியங்களில் கதாநாயகிகள் வர்ணிக்கப்பட்டு இருப்பதை வாசித்தும் கேட்டும் இருக்கிறோம்.

கம்பன் சீதையை வர்ணிப்பதைப் பார்ப்போம்.....

உலகிலேயே மிக அழகானவள் திருமகள்.  பாற்கடலில் தோன்றியவள். அந்தத்  திருமகள் ஒருத்தியிடம் பணிபெண்ணாக இருக்கிறாள் என்றாள் அந்த பெண்ணின் அழகு எப்படி இருக்கும் ?

ஒரு படி மேலே போய் , திருமகள் பணிப் பெண்ணாகக் கூட இருக்க தகுதி இல்லாதவள் என்று நினைக்கும் படி ஒருத்தி இருந்தாள் அவள் எப்படி இருக்க வேண்டும்.  அவள் தான் சீதை என்று ஆரம்பிக்கிறாள் சூர்பனகை.


காமரம் என்ற இசை தொனிக்கும் பாடல்,  கள்ளைப் போல இனிமையான சொற்கள், தேன் நிறைந்து இருக்கும் மலர்களை சூடிய கூந்தல், தேவ லோக பெண்களும் போற்றும் தாமரை மலரில் இருக்கும் அந்தத் திருமகளும் பணிப் பெண்ணாகக் கூட ஆகும் தரம் இல்லை என்று சொல்லும் படி அழகாக இருக்கும் சீதையை பற்றி நான் எப்படி சொல்ல முடியும் என்று சூர்பனகை ஆரம்பிக்கிறாள்.

பாடல்

காமரம் முரலும் பாடல், கள், எனக் 
     கனிந்த இன் சொல்; 
தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும் 
     அணங்கு ஆம்" என்னத் 
தாமரை இருந்த தையல், சேடி 
     ஆம் தரமும் அல்லள்; 
யாம் உரை வழங்கும் என்பது 

     ஏழைமைப்பாலது அன்றோ?

பொருள்

காமரம் முரலும் பாடல் = காமரம் என்ற பண் இசை தொனிக்கும் பாடல்

கள்  எனக் கனிந்த இன் சொல்; = கள்ளை போல மயக்கும் இனிய கனிவான சொற்கள்.  உண்ட பின் மயக்கம் தரும், சுகம் தரும் கள்ளைப் போல அவள் சொற்கள் அவ்வளவு மயக்கம் தரக் கூடியவை


தே மலர் நிறைந்த கூந்தல் = தேன் நிறைந்த மலர்கள் சூடிய கூந்தல் 


"தேவர்க்கும்      அணங்கு ஆம்" என்னத் = தேவ லோக பெண்களே கண்டு வியக்கும்

தாமரை இருந்த தையல் = தாமரை மலரில் இருந்த திருமகள்

சேடி ஆம் தரமும் அல்லள் = சேடிப் பெண்ணாகக் கூட வரக் கூடிய தகுதி இல்லை

யாம் உரை வழங்கும் என்பது = அப்பேற்பட்ட அழகான சீதையைப் பற்றி நான் சொல்லுவது என்பது


ஏழைமைப்பாலது அன்றோ? = என்னுடைய அறியாமை அன்றோ

பெண்ணின் அழகை சொல்ல வந்த கம்பன், அவளின் பேச்சை முதலில் வைக்கிறான். கள் என கனிந்த இனிய சொற்களைக் கொண்டவள் என்று.

பெண்களுக்கு இயற்கையிலேயே இனிய குரல் வளம் உண்டு. பல இடங்களில் சீதையின் பேச்சைப் பற்றி கூறுவான் கம்பன். கிளி போன்ற பேச்சு, மழலை போன்ற பேச்சு  என்றெல்லாம்.

இங்கும் அவளின் பேச்சுத் தன்மையில் இருந்து ஆரம்பிக்கிறான்.

பாடலில் பாடம் இருக்கிறது.

பெண்ணுக்கு மட்டும் அல்ல ஆணுக்கும் பேச்சு சாமர்த்தியம் வேண்டும்.

இனிமையாக பேசுவது ஒரு அழகு. ஒரு வசீகரம்.

உடல் அழகை விட பேச்சு அழகு கட்டிப் போடும்.

சிந்திப்போம்.


1 comment:

  1. அறிவார்ந்த ஆய்வு!

    ReplyDelete