Tuesday, June 3, 2014

இராமாயணம் - கூடலிலும் தலை வணங்காதவன்

இராமாயணம் - கூடலிலும் தலை வணங்காதவன் 



ஆண் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் , பெண்ணின் அழகின் முன்னால் அவன் தலை வணங்கித்தான் ஆக வேண்டும்.  பெண்ணின் அழகில் மயங்கி, மனதைப் பறிகொடுக்காதவன் ஆணே  அல்ல.

ஆனால், இராவணன் பெண்களோடு கூடும் போதும் தலை வணங்காதவன். அவன் கம்பீரம் அப்படி. அவனுடைய வனப்பில், பெண்கள் மயங்குவார்கள். அவன் ஆண்மையின் முன்னால் பெண்கள் மண்டியிடுவார்கள்.



"சிவனும், திருமாலும், பிரமனும் இவனை ஒன்றும் செய்ய முடியாது.  அவர்களாலேயே முடியாது என்றால் பின் யாரால் என்ன செய்ய  முடியும். மெலியும் இடை, பெருக்கும் முலை , மூங்கில் போன்ற தோள்கள், வெல்லும் பெண்களின் புலவியில் கூட தலை வணங்காதவன் இராவணன்"

பாடல்


புலியின் அதள் உடையானும், பொன்னாடை
     புனைந்தானும், பூவினானும் 
நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு 
     யாவர், இனி நாட்டல் ஆவார்? 
மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந் 
     தோள், சேயரிக் கண், வென்றி மாதர் 
வலிய நெடும் புலவியினும் வணங்காத 
     மகுட நிரை வயங்க மன்னோ.

பொருள்

புலியின் அதள் உடையானும் = புலியின் தோலை உடுத்திய சிவனும்

பொன்னாடை புனைந்தானும் = பட்டு ஆடை அணிந்த திருமாலும்

பூவினானும்  = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

நலியும் வலத்தார் அல்லர் = இவனை நலிவு படுத்த முடியாது

தேவரின் இங்கு யாவர் = அவர்களாலேயே முடியாது என்றால் வேறு எந்த தேவர்களால்

இனி நாட்டல் ஆவார்? = இதை நடத்த முடியும்


மெலியும் இடை = நாளும் மெலிந்து கொண்டே இருக்கும் இடை

தடிக்கும் முலை = நாளும் பெரிதாகிக் கொண்டே இருக்கும் தனங்கள்

வேய் இளந் தோள் = மூங்கில் போன்ற இளமையான தோள்கள் ,

சேயரிக் கண் = சிவந்த கண்கள்

வென்றி மாதர் = பெண்கள்

வலிய நெடும் புலவியினும் = வலிமையான நீண்ட கூடலிலும்

வணங்காத = தலை வணங்காத

மகுட நிரை  வயங்க மன்னோ.= மகுடங்கள் அணிந்த தலையைக் கொண்டவன், இராவணன்.


இதை விட அவனின் ஆளுமையை, ஆண்மையை, கம்பீரத்தை சொல்லி விட முடியாது. 

1 comment: