Tuesday, July 1, 2014

இராமாயணம் - தனிமையின் இனிமை

இராமாயணம் - தனிமையின் இனிமை 


இராம இலக்குவனர்களுக்கு மெய் நெறியைச் சொன்ன பின், சவரி தன் உடலை துறந்து அந்த தனிமையான இனிமையை அடைந்தாள் . நினைத்த நேரத்தில் உடலை துறக்க முடிந்தது. உடலை துறக்க முடியும் என்றால் எது உடலை துறக்கும் ?

இராமனும் இலக்குவனும் இதை எல்லாம் படித்து  இருக்கிறார்கள்.ஆனால் பார்த்தது இல்லை. முதன் முறையாக யோகத்தின் பலத்தால் எப்படி உடலை நினைத்த மாத்திரத்தில் துறக்க முடிகிறது என்று கண்டு அளவில்லா வியப்பு அடைந்தார்கள். அதைக் கண்ட அவர்களின் மனத்திலும் பெரிய மகிழ்ச்சி. ஒரு துள்ளலோடு அவர்கள் சவரி  காட்டிய வழியில் சென்றார்கள்.


பாடல்

பின், அவள் உழந்து பெற்ற 
     யோகத்தின் பெற்றியாலே 
தன் உடல் துறந்து, தான் அத் 
     தனிமையின் இனிது சார்ந்தாள்; 
அன்னது கண்ட வீரர் அதிசயம் 
     அளவின்று எய்தி, 
பொன் அடிக் கழல்கள் ஆர்ப்ப, 
     புகன்ற மா நெறியில் போனார்.

பொருள்

பின், = அதன் பின்

அவள் உழந்து பெற்ற = அவள் முயன்று பெற்ற

யோகத்தின் பெற்றியாலே = யோகத்தின் பலனால்

தன் உடல் துறந்து = தன் உடலை துறந்து

தான் = அவள்

அத் தனிமையின் இனிது சார்ந்தாள் = அந்த தனிமையின் இனிமையை அடைந்தாள்

அன்னது = அதைக்

கண்ட வீரர் = கண்ட இராம இலக்குவனர்கள்

அதிசயம் அளவின்று எய்தி = அளவற்ற அதிசயம் அடைந்தனர்

பொன் அடிக் கழல்கள் ஆர்ப்ப = பொன் போன்ற அடிகளில் அணிந்த கழல்கள் சப்திக்க

புகன்ற மா நெறியில் போனார் = சொன்ன பெரு வழியில் சென்றனர்


யோகம் செய்தது சவரி.

உடலை துறந்து தனிமையான இனிமை கண்டது சவரி.

அதைக் கண்ட இராமனுக்கும் இலக்குவனுக்கும் பெரிய மகிழ்ச்சி. ஏன் ?

மனிதன் யோகத்தின் உச்சியை தொடும்போது இறைவன் மகிழ்கிறான். 

இறைவன் மகிழ்கிறான் என்றால் உயிர்கள் அனைத்தும் மகிழ்கின்றன என்று பொருள். 

பிறவியின் நோக்கம், யோகத்தின்  பலனை அடைவது. 

சவரி அடைந்தாள் . இராமன் மகிழ்ந்தான். 

இறைவனும், இயற்கையும் மகிழ வேண்டுமானால் யோகத்தின் உச்சம் தொடுங்கள். 

1 comment:

  1. இறப்பு அல்ல, "தனிமையின் இனிமையை" அடைந்தாள். நாமும் இறந்தால் அப்படித்தான் அடைவோமா??

    ReplyDelete