Thursday, July 24, 2014

கம்ப இராமாயணம் - எதுதான் கடவுள் ?

கம்ப இராமாயணம் - எதுதான் கடவுள் ?


கடவுளைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்த கம்பர் யுத்த காண்டத்தில் முத்தாய்பாக ஒன்று  சொல்கிறார்.

கடவுள் ஒன்று என்றால் ஒன்று, பல என்றால் பல, தன்மை இல்லாதது என்றால் அப்படித்தான், தன்மை உள்ளது என்றால் அதுவும் சரிதான், இல்லை என்றால் இல்லைதான், உள்ளது என்றால் உள்ளது, நம்பிக்கை தான் வாழ்க்கை என்று  முடிக்கிறார்.

கடவுள் இல்லை என்று சொன்னால் கடவுள் இல்லைதான். அப்படி ஒன்று இருந்து விட்டுப்  போகட்டுமே.இல்லாமல் இருப்பது என்ற ஒரு குணம் மட்டும் கடவுளுக்கு இல்லாமல் இருப்பானேன். அந்த குணமும் அவருக்கு உண்டு.

பாடல்

ஒன்றே என்னின் ஒன்று ஏ ஆம்,
    பல என்று உரைக்கின் பல ஏ ஆம்,
அன்றே என்னின் அன்றேயாம்,
    ஆமே என்னின் ஆம் ஏ ஆம்,
இன்றே என்னின் இன்றேயாம்,
    உளது என்று உரைக்கில் உளதேயாம்,
நன்றே நம்பி குடிவாழ்க்கை!
    நமக்கு இங்கு என் ஓ! பிழைப்பு? அம்மா!

பொருள் 

ஒன்றே என்னின் ஒன்று ஏ ஆம் = கடவுள் ஒன்று தான் என்று சொன்னால் ஒன்றுதான்.

பல என்று உரைக்கின் பல ஏ ஆம் = ஒன்றல்ல, பல என்று சொன்னால் அது பலவாக இருக்கும்


அன்றே என்னின் அன்றேயாம் = அதற்கு ஒரு குணமும் இல்லை என்று சொன்னால் ஒரு குணமும் இல்லை


ஆமே என்னின் ஆம் ஏ ஆம் = அதற்கு பல குணங்கள் உண்டு என்று சொன்னால் அதற்கு பல குணங்கள் இருக்கும்

இன்றே என்னின் இன்றேயாம் = கடவுள் இல்லை என்று சொன்னால் இல்லை தான்.

உளது என்று உரைக்கில் உளதேயாம் = கடவுள் உண்டு என்று சொன்னால் உண்டு

நன்றே நம்பி குடிவாழ்க்கை! = நல்லது நம் வாழ்க்கை

நமக்கு இங்கு என் ஓ! பிழைப்பு? அம்மா! = நமக்கு வேறு என்ன பிழைப்பு

இந்த பல குணங்கள் உள்ள கடவுள் நம்மை மிகவும்  குழப்புகிறார்.

ஒவ்வொரு மதமும் ஒன்று சொல்கிறது. மதங்களுக்குள் உள்ள பிரிவுகள் மற்றொன்றைச்  சொல்கின்றன.

இதற்கு நடுவில் நாத்திகர்கள் புகுந்து கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள்.

பாமர மக்கள் குழம்பிப் போய்  விடுகிறார்கள்.

இதற்கு ஒரு தெளிவு உண்டா ? எதுதான் சரி ? எப்படி அது சரியா  தவறா என்று அறிந்து கொள்வது  ?

நாத்திகம் தவறா ? ஆத்திகம் தவறா ? நம்பிக்கை அறிவீனமா ? இது வரை கடவுள்  பற்றி சொன்ன பெரியவர்கள் அனைவரும் தவறான ஒன்றைச் சொல்லிச் சென்றார்களா ?

இதைப் பற்றி அடுத்த ப்ளாகில் சிந்திப்போம்.

  

2 comments:

  1. கடவுள் உண்டு, இல்லை என்பதையெல்லாம் விட்டு விட்டு அவரவர் பிழைப்பைப் பார்க்க வேண்டும் என்கிறார் போலும்!

    ReplyDelete
  2. அருமையான விளக்கம் முற்றிலும் புதிய பார்வை.

    ReplyDelete