Friday, August 15, 2014

தேவாரம் - தோடுடைய செவியன் - பாகம் 2

தேவாரம் - தோடுடைய செவியன் - பாகம் 2

திரு ஞான சம்பந்தர் சிறு குழந்தையாக இருந்த போது , ஒரு நாள் அவருடைய தந்தையார், ஞான சம்பந்தரை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச்  சென்றார்.போகிற வழியில், கோவில் திருக் குளத்தில் நீராடி செல்லலாம் என்று குளத்தில் இறங்கி நீராடிக்  கொண்டிருந்தார்.அப்போது, ஞான சம்பந்தருக்கு பசி எடுத்தது. குரலெடுத்து  அழுதார்.அங்கு, பார்வதி , சிவனோடு தோன்றி தன் திருமுலைப் பாலை ஞான சம்பந்தருக்குத் தந்து அவரின் பசியைப்  போக்கினார்.

நீராடி வந்த தந்தையார், பிள்ளையின் வாயில் பால் ஒழுகுவதை கண்டு, யார் தந்தார்கள் என்று வினவ , குழந்தை மேலே காட்டி

கீழ்கண்ட பாடலைப் பாடியது....

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்தபீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
சீர் பிரித்த பின்

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்காடு உடைய சுட லைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்ஏடு உடைய மலரான் உன்னை நாள் பணிந்து  ஏத்த அருள் செய்தபீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே 
காதில் தோடு அணிந்து, எருதின் மேல் ஏறி, வெண்மையான மதியை சூடி,    சுடு காட்டில் உள்ள சாம்பலை  உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தை கவர்ந்த கள்வன், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன் அன்று பணிந்து பூசை செய்ய, அவனுக்கு அருள் வழங்கிய சிறந்த சீர்காழி என்ற ஊரில் இருக்கும் பெருமான்  அவனே
என்று கூறி அருளினார்.

பொருள்
தோடு உடைய செவியன் = தோடு உள்ள செவியன்
விடை ஏறி = எருதின் மேல் ஏறி
ஓர் = ஒரு
தூ = தூய்மையான
வெண்  = வெண்மையான
மதி = நிலவை
 சூடிக் =  தலையில் சூடி
காடு உடைய = சுடு கட்டில் உள்ள
சுட லைப் = சாம்பலை
பொடி = பொடியாக
பூசி = உடல் எல்லாம் பூசி
என் உள்ளங் கவர் கள்வன் = என் உள்ளத்தை கவர்ந்த கள்வன்
ஏடு உடைய மலரான் = தாமரை மலரில் இருக்கும் பிரமன்
உன்னை = உன்னை (சிவனை )
நாள் பணிந்து  ஏத்த= அன்றொருநாள் பணிந்து துதிக்க
அருள் செய்த = அவனுக்கு அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் = பெருமை மிக்க பிரமபுரம்
மேவிய = உள்ள
பெம்மான் இவன் அன்றே = பெருமான் இவன் அல்லவோ

---------------------------
பால் தந்தது பார்வதி. அவளைப் பற்றி ஒரு வரி கூட இல்லையே என்று கேள்வி  எழலாம்.
தோடுடைய செவியன் = தோடு என்பது பெண்கள் அணியும் காதணி. பெண்கள்    காதணியை அணிந்திருப்பவன் உலகிலேயே ஒருவன் மட்டும்தான். அவன் அர்த்தநாரியான சிவன். பார்வதி தனியாக வரவில்லை. சிவனோடு சேர்ந்து வந்தாள் . அர்தநாரியாக வந்தான் என்பதை  இரண்டே வார்த்தையில் சொல்லி விட்டார். "தோடுடைய செவியன்"

அது மட்டும் அல்ல, பிள்ளை அழுதபோது அதில் காதில் விழுந்து அவள் வந்தாள். எனவே, "தோடுடைய செவியன்" என்று செவியை முதலில் விளித்து  பாடினார்.
ஒவ்வொரு உயிரும் ஆணும் பெண்ணும் சேர்ந்த கலப்பில் வருவதுதான். நம் ஒவ்வொருவருக்குளும் ஆண் தன்மை, பெண் தன்மை இரண்டும் கலந்தே இருக்கும். நாயக , நாயகி பாவத்திற்கு ஆதாரமாக தோடுடைய செவியன் என்றார். 
சில பிள்ளைகளுக்கு அப்பாவிடம் அன்பு அதிகம் இருக்கும். சில பிள்ளைகளுக்கு அம்மாவிடம் அன்பு அதிகம் இருக்கும். இரண்டும் சரி விகிதத்தில் கலந்தால் பிள்ளைகள் மனம் அவர்கள் மேல் காதல் கொள்ளும். கோபம் மட்டும் கண்டிப்பை மட்டுமே காட்டும் தந்தைமேலும் சரி, எப்போதும் செல்லம் தரும் தாய் மேலும் சரி, பிள்ளைகளுக்கு  அதிக பிடிப்பு இருக்காது.  கண்டிப்பும் இருக்க வேண்டும், காதலும் இருக்க வேண்டும். 

இரண்டும் கலந்தால் "உள்ளம் கவர் கள்வன்" 
"தூவெண் மதி சூடி " = தூய்மையான வெண்மையான மதியை தலையில் சூடி. வெண்மை வெளியே தெரிவது. தூய்மை  உள்ளே உள்ளது. உள்ளும் புறமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவது தூவெண் மதிசூடி என்ற தொடர். 
சுடலை பொடி பூசி = சுடலை என்றால் சுடு காடு. சுடு காட்டில் உள்ள சாம்பலை பூசி. அது என்ன சுடுகாட்டு சாம்பல் ? அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லையே 
சுடுகாட்டில் அவன் இருக்கிறான் . இறந்த பின் செல்லும் இடத்தில் அவன் இருக்கிறான். 
இறந்த பின், இறைவனால் என்ன பிரயோஜனம் ?

இறப்பது என்றால் என்ன ? உயிரை விடுவது அல்ல.
நான் என்ற ஆணவம் இறக்க வேண்டும்.  நான் என்ற ஆணவ மலம் இறந்த இடத்தில் அவன் நிற்கிறான். 

கயல் மாண்ட கண்ணி தன் பங்கன் எனைக் கலந்து ஆண்டலுமே,
அயல் மாண்டு, அருவினைச் சுற்றமும் மாண்டு, அவனியின்மேல்
மயல் மாண்டு, மற்று உள்ள வாசகம் மாண்டு, என்னுடைய
செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!

அயல் மாண்டு = சுற்று சூழல் எல்லாம் இறந்து
அருவினை சுற்றமும் மாண்டு = வினை மாண்டு, சுற்றம் மாண்டு 
மயல் மாண்டு = உலகின் மேல் உள்ள ஆசை இறந்து 
வாசகம் மாண்டு = நான் படித்து சொல்ல வேண்டும் என்று நினைத்த வாசகங்கள் அனைத்தும் இறந்து 
செயல் மாண்ட = என்னுடைய செயலும் இறந்து 

இத்தனையும் இறந்ததை எண்ணி மாணிக்க வாசகர் எண்ணி வருந்தவில்லை. தெள்ளேணம் கொட்டாமோ என்று கொண்டாடுகிறார்.
எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே என்று எல்லாம் இழந்ததை நலம் என்கறார் அருணகிரி. 
நான் என்ற அது இறந்த இடத்தில் ஆனந்த நடனம் ஆடுபவன் அவன். அதை சொல்ல வருகிறார் ஞான சம்பந்தர் "காடுடைய சுடலை பொடி பூசி" என்றார். 





 

4 comments:

  1. இந்தக் காலத்தில் ஸ்டைலாக பல ஆண்கள் காதணி அணிகிறார்கள்!

    நகைச்சுவை ஒருபுறம் இருக்கட்டும்...

    சிவன் அர்த்தநாரி என்றால், பார்வதியும் அர்த்தபுருஷி தானே? அப்படியும் பாடியிருக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. சிவன் பார்வதியை விடுங்கள். சொன்ன கருத்து, உயிரும் (சீவனும்) சக்தியும். உங்கள் உடலில் உயிரில்லாமல் சக்தி இருந்து ஒரு பலனும் இல்லை. மலையைத் தூக்கும் சக்தி இருந்தாலும் உயிரில்லாவிடில் பலனில்லை. சக்தி இல்லாத உயிருடன் இருக்கும் பல உடல்கள் இருக்கின்றன. இல்லாமல் என்று சொல்லக் கூடாது. செயல் பட முடியாமல் என்று வைத்துக் கொள்ளலாம். மூளை இறந்து விட உயிர் இருக்கிறதே அது போல. சக்தி இல்லையேல் சிவனில்லை சிவனில்லையேல் சக்தி இல்லை.. இதை குறிக்கத்தான் அர்த்தநாரி தத்துவம். ஆண் பெண் குறித்தல்ல.

      Delete
  2. அய்யா திலீப், நீங்க சொல்ற மாதிரின்னா, "தோடுடைய செவியள்" என்று பாடியிருப்பார் அல்லவா?

    ReplyDelete
  3. மிக அற்புதமான விளக்கம். நன்றி ஐயா

    ReplyDelete