Sunday, August 31, 2014

இராமாயணம் - இராவணன் சீதை உரையாடல் - பாகம் 5

இராமாயணம் - இராவணன் சீதை உரையாடல் - பாகம் 5


அசோக வனத்தில் உள்ள சீதையிடம் இராவணன் தொடர்ந்து பேசுகிறான்.

"அற வழியில் வந்த செல்வம் போன்றவளே. அமிழ்தை விட இனிமையானவளே. என்னை பிறக்காதவன் என்று ஆக்க  வந்தவளே.என் மானம் போக, நான் செய்த பெரிய செயல்கள் எல்லாம் மறந்து போக, நீங்கள் எனக்காக இரங்கும் நாள் வரும் என்ற மருந்தினால் இறந்து இறந்து பிழைகின்றேன். இது யாருக்குத் தெரியும்"

என்று கூறுகிறான்.

பாடல்

‘அறம் தரும் செல்வம் அன்னீர்! அமிழ்தினும் இனியீர்!
                                       என்னைப்
பிறந்திலன் ஆக்க வந்தீர்; பேர் எழில் மானம் கொல்ல,
"மறந்தன பெரிய; போன வரும்" மருந்து தன்னால்,
இறந்து இறந்து உய்கின்றேன் யான்; யார் இது தெரியும்
                                      ஈட்டார்?

பொருள்

அறம் தரும் செல்வம் அன்னீர்! = அறம் தரும் செல்வம் போன்றவளே. அற வழியில் சேர்த்த செல்வம் என்று சொல்லவில்லை. அறம் தரும் செல்வம் என்றான். அறம் செல்வத்தை கொண்டு சேர்க்கும். அறம் அல்லாதது செல்வத்தை அழிக்கும்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே 
செல்வத்தைத் தேய்க்கும் படை.

என்பார்  வள்ளுவர்.


அமிழ்தினும் இனியீர்! = அமிழ்தத்தை விட இனிமையானவளே

என்னைப் = என்னை

பிறந்திலன் ஆக்க வந்தீர்;= பிறக்காதவன் என்று ஆக்க வந்தீர்.  அதாவது இராவணன் என்ற ஒருவன் பிறக்கவே இல்லை. அவன் யார் என்று உலகம் அறியாது என்ற நிலையை உண்டாக்கி விட்டீர்கள்.

 பேர் எழில் மானம் கொல்ல, = பெருமை பெற்ற அருமையான மானத்தை கொல்ல


மறந்தன பெரிய = நான் செய்த பெரிய காரியங்கள் எல்லாம் மறந்து போய் விட்டன.


போன வரும் = நீங்கள் இதுவரை என் மேல் இரக்கம் கொள்ளாமல் போனீர்கள். நீங்கள் என் மேல் இரக்கம் கொள்ளும் நாள் வரும். 


மருந்து தன்னால் = அந்த நாள் வரும் என்ற நம்பிக்கையே எனக்கு மருந்து. அந்த மருந்தினால்

இறந்து இறந்து உய்கின்றேன் யான்; = இறந்து இறந்து பிழைக்கின்றேன். 

யார் இது தெரியும் ஈட்டார்? = யாருக்கு இது தெரியும்


காமம் தலைக்கு ஏறும்போது தான் யார் என்பது மறந்து போகிறது.  எண்ணில் அடங்கா  உதாரணங்கள் சொல்லலாம்....பெண்ணின் மயக்கத்தில் தான் யார், தன் நிலை   என்ன அறியாமல் தவறு செய்பவர்கள் ஆயிரம் ஆயிரம்  பேர். 

பெருமைகள் எல்லாம் மறந்து போகிறது. 

காமம் , உயிர் போகும் வலி. 

இல்லையென்றால் அத்தனையும் தூக்கி எறிந்துவிட்டு  இப்படி நிற்பானா ? 



1 comment:

  1. எப்படிக் கெஞ்சுகிறான்! ஆச்சரியம்.

    கம்ப இராமாயணப் பாடல்களில் இந்தப் பகுதி ஏன் அவ்வளவு பெயர் பெறவில்லை என்று தெரியவில்லை. இராவணன் கெஞ்சுவதில் ஒவ்வொரு பாடலிலும் எப்படி உணர்ச்சிகள் ஏறி நிற்கின்றன! அருமை.

    ReplyDelete