Thursday, August 14, 2014

தேவாரம் - தோடுடைய செவியன்

தேவாரம் - தோடுடைய செவியன் 


திரு ஞான சம்பந்தர் சிறு குழந்தையாக இருந்த போது , ஒரு நாள் அவருடைய தந்தையார், ஞான சம்பந்தரை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச்  சென்றார்.போகிற வழியில், கோவில் திருக் குளத்தில் நீராடி செல்லலாம் என்று குளத்தில் இறங்கி நீராடிக்  கொண்டிருந்தார்.அப்போது, ஞான சம்பந்தருக்கு பசி எடுத்தது. குரலெடுத்து  அழுதார்.அங்கு, பார்வதி , சிவனோடு தோன்றி தன் திருமுலைப் பாலை ஞான சம்பந்தருக்குத் தந்து அவரின் பசியைப்  போக்கினார்.

நீராடி வந்த தந்தையார், பிள்ளையின் வாயில் பால் ஒழுகுவதை கண்டு, யார் தந்தார்கள் என்று வினவ , குழந்தை மேலே காட்டி

கீழ்கண்ட பாடலைப் பாடியது....

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

சீர் பிரித்த பின்

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்
காடு உடைய சுட லைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் உன்னை நாள் பணிந்து  ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே 

காதில் தோடு அணிந்து, எருதின் மேல் ஏறி, வெண்மையான மதியை சூடி,    சுடு காட்டில் உள்ள சாம்பலை  உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தை கவர்ந்த கள்வன், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன் அன்று பணிந்து பூசை செய்ய, அவனுக்கு அருள் வழங்கிய சிறந்த சீர்காழி என்ற ஊரில் இருக்கும் பெருமான்  அவனே

என்று கூறி அருளினார்.


பொருள்

தோடு உடைய செவியன் = தோடு உள்ள செவியன்

விடை ஏறி = எருதின் மேல் ஏறி

ஓர் = ஒரு

தூ = தூய்மையான

வெண்  = வெண்மையான

மதி = நிலவை

 சூடிக் =  தலையில் சூடி

காடு உடைய = சுடு கட்டில் உள்ள

சுட லைப் = சாம்பலை

பொடி = பொடியாக

பூசி = உடல் எல்லாம் பூசி

என் உள்ளங் கவர் கள்வன் = என் உள்ளத்தை கவர்ந்த கள்வன்

ஏடு உடைய மலரான் = தாமரை மலரில் இருக்கும் பிரமன்

உன்னை = உன்னை (சிவனை )

நாள் பணிந்து  ஏத்த= அன்றொருநாள் பணிந்து துதிக்க

அருள் செய்த = அவனுக்கு அருள் செய்த

பீடு உடைய பிரமா புரம் = பெருமை மிக்க பிரமபுரம்

மேவிய = உள்ள

பெம்மான் இவன் அன்றே = பெருமான் இவன் அல்லவோ

மிக மிக அருமையான  பாடல்.

இதற்குள் கொட்டிக் கிடக்கும் அர்த்தம் ஆயிரம்.

மேலோட்டமான அர்த்தம் இவ்வளவுதான். ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க ஊற்று போல பொங்கி வரும் இதன் அர்த்தங்கள்.

அவை என்ன என்று பின் வரும் ப்ளாகில் சிந்திப்போம்.





20 comments:

  1. அழகான பாடல் என்பது சரிதான். அதுவும் "உள்ளங்கவர் கள்வன்" என்பது மிக இனிமை.

    ஆனால் யார் பால் தந்தது என்று தந்தை வினவினால், பார்வதியைப் பற்றி ஒரு வரி கூடச் சொல்லவில்லையா? ஏன்?

    ReplyDelete
    Replies
    1. Once get feed he become mother's nature. So he is not answering perhaps Devi answering.

      Delete
    2. ஏனென்றால் தாயுமானவன் சிவன்

      Delete
    3. தோடுடைய செவியன் என்பதற்கு மாதொருபாகன் என‌வும் பொருள் கூறுகிறார்கள்.

      Delete
    4. ஓம் நமசிவாயம்

      Delete
  2. அம்மையும் அப்பனும் ஒன்றேயென்பதால் அப்பனைப் பற்றி மட்டும் பாடினார் ஐயா.

    ReplyDelete
  3. நமச்சிவாயம்

    ReplyDelete
  4. இதில் மொத்தம் 11 பாடல்கள் வருகிறது அனைத்திற்கும் இப்படி சீர்திருத்து பதிவிடுமாறு வேண்டுகிறேன்

    ReplyDelete
  5. ஓம் நமசிவாய

    ReplyDelete
  6. திருமுறைகள் தொகுக்கப்பட்டவை. பல ஓலைச்சுவடிகள் செல்லறித்துப் போனது. அப்படி தொலைந்திருக்கலாம்.

    ReplyDelete
  7. ஐயா, தோடுடைய செவியன் என்னும் முதல் அடியிலே திருஞானசம்பந்தர் அன்னையையும் இணைத்து பாடிவிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. இந்த பதில். சரி இல்லை
      அந்தக்காலத்தில் ஆண்களும் காது குத்தி காதணி அணிந்து இருந்தனர்

      Delete
  8. அருமை

    ReplyDelete
  9. ௭ல்லா பாடலுக்கும் பொருள் வேண்டும் please please please

    ReplyDelete
    Replies
    1. for entire thevaaram? it is a very big task. there are many websites which provides the meaning for entire thevaaram.

      Delete