Monday, August 18, 2014

திருக்குறள் - வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள் - வாழ்க்கைத் துணை நலம்


வாழ்க்கைத் துணை நலம் என்று மனைவியைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

இன்றுள்ள பெண்ணுரிமை போராட்டாக்காரர்கள் "அதெப்படி நாங்கள் என்ன துணை, கணவன் மட்டும் தான் main -ஆ" என்று கொடி பிடிக்கிறார்கள்.

உயர்ந்த நூல்களை படிக்கும் போது, நம் கீழ்மையை அதன் மேல் ஏற்றக் கூடாது. திருக்குறளை விட, திருவள்ளுவரை விட தாங்கள் அறிவில் மேலானவர்கள் என்று நினைத்துக் கொள்வதால் வரும் வினைகள் இவை.

நாம் யாரைத் துணையாகக் கொள்வோம் ?

நம்மை விட பலசாலியையா அல்லது நம்மை விட பலவீனமானவனையா ?

துணை என்பது நம்மை விட சிறந்ததாக இருக்க  வேண்டும்.

துணையோடு அல்லது நெடு வழி போகேல் என்றாள் அவ்வைப்   பாட்டி. வாழ்க்கை நீண்ட பயணம். அதற்கு ஒரு நல்ல துணை வேண்டாமா ?

அபிராமி பட்டர் ஒரு படி மேலே போய் , துணை என்பது தெய்வம் என்கிறார்.

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

என்னுடைய துணை அபிராமி என்று அறிந்தேன் என்கிறார்.

பயந்த தனி வழிக்குத் துணை முருகனே என்கிறார் அருணகிரி நாதர்

விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த
பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!


துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ என்பார் திருநாவுக்கரசர்.

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடை மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒன்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!

இப்படி , துணை என்பது நம்மை விட மிக மிக  உயர்ந்தது.

துணை என்பது தாழ்ந்தது அல்ல.

மனைவி எப்போது வாழ்க்கைத் துணையாவாள் என்றும் வள்ளுவர்  சொல்கிறார்.


மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

 சீர் பிரித்த பின்

மனைக்குத் தக்க மாண்பு உடையள் ஆகி தன்னைக் கொண்டான்
வளத்துக்கு தக்காள் வாழ்க்கைத் துணை

சீர் பிரித்த போது சற்று நீட்டியும் இருக்கிறேன், எளிதாகப் புரிந்து கொள்ள.

பொருள்

மனைக்குத் தக்க மாண்பு உடையள் ஆகி = வீட்டுக்கு ஏற்ற மாண்பு உடையவள் ஆகி

தன்னைக் கொண்டான் = தன்னை மணந்த கணவனின்

வளத்துக்கு தக்காள் = வளத்துக்கு தக்கபடி வாழ்பவள்

வாழ்க்கைத் துணை = வாழ்க்கைத் துணைவி



மனைக்குத் தக்க மாண்பு என்றால் என்ன ?

பரிமேல் அழகர் சொல்கிறார் - துறவிகளுக்கு  உதவுவது, ஏழைகளுக்கு அன்னம்  அளிப்பது,விருந்தினர்களை உபசரிப்பது  போன்றது.

இது எல்லாம்  நல்லதுதான். இருந்தாலும், அதற்க்கு என்று ஒரு அளவு வேண்டாமா ? இருக்கின்ற செல்வத்தை எல்லாம் அள்ளி வழங்கி விட்டு பின் எப்படி குடும்பம்  நடத்துவது ?

எனவே அடுத்த வரியில் சொல்கிறார்

கணவனின் வளத்துக்கு தக்கபடி வாழ வேண்டும் என்று.

வீடு வேணும், கார் வேணும், பங்களா வேணும், நகை நட்டு வேண்டும் என்று நச்சரிக்கக்  கூடாது.

வளம் என்றால் வருமானம் மட்டும் அல்ல - சொத்து, நல்ல  பெயர்,செல்வாக்கு என்று அனைத்தும் அதில்  அடங்கும்.

குடும்பத்தின் நல்ல பெயருக்கு களங்கம் வராமல், வருமானத்திற்கு அதிகாமாக செலவு  செய்யாமல், சொத்துக்கு அதிகமாக கடன் வாங்காமல்...வளத்துக்கு தக்க வாழ்பவள் வாழ்க்கைத் துணை.

2 comments:

  1. துணை பற்றிய விளக்கம் அபாரம்;

    நன்றி.

    ReplyDelete
  2. சும்மா கேள்வி கேட்கும் முன்னே, துணை என்பதன் பொருள் எழுதி வாயை அடைத்துவிட்டாய்!

    தூள் விளக்கம்! மிகவும் அனுபவித்தேன். நன்றி.

    ReplyDelete