Saturday, August 2, 2014

இராமாயணம் - இனி தாலியைத் தொட மாட்டார்கள்

 இராமாயணம் - இனி தாலியைத் தொட மாட்டார்கள்  



போரில் இந்திர சித்து மாண்டு போனான். களத்தில் தன் மகனை கண்டு எடுத்து மடியில் போட்டுக் கொண்டு இராவணன் புலம்புகிறான். அவனுடைய ஒவ்வொரு தலையும் தனித்தனியே புலம்பியதாம். தலைக்கு ஒரு பாட்டு வைக்கிறார் கம்பர்.

இரசிகமணி டி. கே. சி சொல்லுவார் , "அடடா ...இராவணனுக்கு இன்னும் கொஞ்சம் தலை இல்லையே ...இருந்திருந்தால் அதற்கும் சேர்த்து நமக்கு இன்னும் கொஞ்சம் பாடல்கள் கிடைத்திருக்குமே" என்று.

இந்திர சித்து உயிரோடு இருந்த காலத்தில் , அவன் போருக்குப் புறப்படும் போது தன் வில்லின் நாணை சுண்டி ஒலி எழுப்புவான். அந்த ஒலி கேட்டவுடன் இயக்கர்களின் மனைவிமார் தங்கள் தாலியைத் தொட்டுப் பார்த்துக் கொள்வார்களாம்.....கழுத்தில் இருக்கிறதா இல்லை கழன்று விழுந்து விட்டதா என்று. தங்கள் கணவர்களின் உயிருக்கு ஆபத்து வந்து விட்டது என்று அவர்கள் பயப்படுவார்கள். இன்னும் எவ்வளவு நேரம் இந்த தாலி தங்கள் கழுத்தில் இருக்குமோ என்று பயந்து அதை தொட்டு பார்த்துக் கொள்வார்களாம். இந்திர்ஜித்தா, நீ இன்று இறந்து விட்டாய், இனி அவர்களுக்கு பயம் இல்லை. தங்கள் தாலியைத் தொட்டுக் கொள்ள வேண்டி இருக்காது என்று இராவணனின் ஒரு தலை புலம்பிற்று.


பாடல்  


'சேல் இயல் கண் இயக்கர்தம் தேவிமார்,
மேல் இனித் தவிர்கிற்பர்கொல், வீர! நின்
கோல வில் குரல் கேட்டுக் குலுங்கித் தம்
தாலியைத் தொடல்' என்னும் - மற்று ஓர் தலை.

பொருள்

சேல் = மீன்

இயல் = போன்ற

கண் = கண்களைக் கொண்ட

இயக்கர்தம் தேவிமார் = இயக்கர்களின் தேவிகள்

மேல் இனித் = இனிமேல்

 தவிர்கிற்பர்கொல் = தவிர்ப்பார்களோ 

 வீர! = வீரனே

நின் = உன்னுடைய

கோல வில் = வீரம் பொருந்திய வில்லின்

குரல் கேட்டுக் = ஒலி கேட்டு

குலுங்கித் = திடுக்கிட்டு

தம் = தங்களுடைய

தாலியைத் தொடல்' = தங்களுடைய தாலியைத் தொடும் அந்த செய்கையை

என்னும் - மற்று ஓர் தலை. = என்று சொல்லும் மற்றும் ஓர் தலை



1 comment:

  1. "குலுங்கி" என்பது என்ன அருமையான சொல் இந்த இடத்தில்! ஆகா, ஆகா! நன்றி.

    ReplyDelete