Thursday, August 21, 2014

சிவ புராணம் - மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

சிவ புராணம் - மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்



புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.


எளிமையான  வரிகள்.

சிவ புராணத்தில் இந்த பகுதியை பல பேர் சொல்லும் போது ,இது தற்கால evolution theory யை அடி ஒற்றி இருக்கிறது என்று  சொல்லுவார்கள்.

பறவையில் இருந்து பாம்பு வந்ததா ? பின் கல் எப்படி வந்தது என்று சர்ச்சைகள்  வந்தன.

அது ஒரு புறம்  இருக்கட்டும்.

பிறந்தோம் , வளர்ந்தோம்...எப்படி வளர்ந்தோம்...

மனிதனாக  வளரலாம்.

பணம், பதவி, பொருள் , பெண், மண் என்று பேயாகத் திரியலாம்.

பலம் கொண்டு எல்லோரையும் அடக்கி ஆண்டு அதிகாரம் செலுத்தி
அரக்கர்களைப் போல மாறலாம்.

படித்து,ஞானம் பெற்று, தானம் செய்து, தவம் செய்து முனிவராய், தேவராய் ஆகலாம்.



பிறந்தோம். வளர்ந்தோம். இறந்தோம்.

இறந்த பின் உடலை புதைத்தோ எரித்தோ விடுவார்கள்.

உடல் மீண்டும் மண்ணாகப் போகும்.

அதில் புல் முளைக்கலாம். செடி முளைக்கலாம். மரம் முளைக்கலாம்.

அந்த செடியிலோ, மரத்திலோ புழுக்களும், பறவைகளும், பாம்புகளும் வாழலாம்.

என்னவாக ஆவோம். எப்படி ஆவோம் என்று நமக்கு என்ன தெரியும் ?

என்னனவோ செய்து, எப்படியெல்லாமோ ஆகிக் கொண்டு இருக்கிறோம்.

ஒன்று மட்டும் உறுதி.

நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம். நேற்று மாதிரி இன்று இல்லை.  இன்று போல நாளை இருக்காது.

இப்படி ஒன்றில் இருந்து ஒன்றாய், இதிலிருந்து அதுவாய், அதில் இருந்து இதுவாய் மாறிக் கொண்டே போனால் இதற்கு முடிவுதான் என்ன ?

தான் ஒரு தொடர் சுழற்சியின் நடுவில் இருப்பதை அடிகள் உணர்ந்து...

"மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்"  என்கிறார்.

எப்போதும் நினைவில் இருக்க வேண்டிய ஒன்று...திருவடி என்று எங்கெல்லாம் வருகிறதோ அது ஞானத்தையே  குறிக்கும்.

மெய்யான ஞானம் அடைந்து வீடு பேறு பெற்றேன் என்கிறார் அடிகள்



No comments:

Post a Comment