Friday, August 22, 2014

சிவ புராணம் - ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

சிவ புராணம் - ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே



உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

நான் உய்யும் படி என் உள்ளத்தின் உள்ளே ஓங்காரமாய் நின்றவனே.
உண்மையானவனே.
விமலனே.
எருதை மேய்பவனே.
வேதங்களால்  ஐயா என்று ஓங்கி உச்சரிக்கப்படுபவனே.
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே.

இவ்வளவுதான் அர்த்தம் - மேலோட்டமாகப் பார்த்தால்.

சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

வாழ்வில் எது உண்மை, எது பொய் என்று எப்படி அறிவது ? ஏன் அறிய வேண்டும்.

பொய்யானவற்றின் பின்னால் போனால் அவை திருப்தி தராது.

நீர் குமிழியை விரட்டிப் பிடிப்பதில் என்ன பயன் ?

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்
மருளான் ஆம், மாணாப் பிறப்பு.

என்பார் வள்ளுவர். பொருள் அல்லாதவற்றை பொருள் என்று உணரும் மயக்கத்தினால் இந்த பிறவி மீண்டும் மீண்டும் உண்டாகிறது.

எது உண்மையானது, எது பொய்யானது என்று அறியும் அறிவு வேண்டும்.

அடிகள் சொல்கிறார் - "மெய்யா". உண்மையானவனே, மெய்யே வடிவானவன்.

இறைவன் என்பது மெய். உண்மை என்று அறிவிக்கிறார்.

அந்த உண்மையை, மெய்யை எப்படி அறிவது ?

நீர் மேல் பாசி படிந்திருக்கும். பாசி விலகினால் நீர் தெரியும்.

கண்ணாடி மேல் தூசி படிந்திருக்கும். தூசியை துடைத்தால் பிம்பம் தெளிவாகத் தெரியும்.

செம்பின் மேல் களிம்பு  படிந்திருக்கும். களிம்பு போனால், செம்பு பளிச்சென்று இருக்கும்.

நம் அறிவின் மேல் எத்தனை அழுக்கு. மலம்.

மலம் என்பது அழுக்கு. கழிவு. வேண்டாதது.

நாம் தான் எத்தனை அழுக்குகளை சுமந்து கொண்டு இருக்கிறோம்.

அழுக்குகளை அழகுகள் என்று நினைத்து இறுகப் பற்றிக் கொண்டு இருக்கிறோம்.

 நமக்கு இருக்கும் மலங்களை மூன்று விதமாக  பிரிக்கிறார்கள்.

ஆணவம் - கன்மம் - மாயை என்று.

இந்த மூன்று மலங்களும் நீங்கினால் சீவன் சிவன் ஆகும். சீவனுக்கும் சிவனுக்கும் ஒரே வித்தாயசம் தான்.

மலம் உள்ளது சீவன். இல்லாதது சிவன்.

அவன் எந்த மலமும் இல்லாதாவன் - வி-மலன். மலம் இல்லாதவன்.

மனிதன் தெய்வம் ஆகலாம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப்படும் 

என்பார் வள்ளுவர்.


வி என்றால் இல்லாதது என்று  அர்த்தம். எல்லோருக்கும் ஒரு தலைவன் , நாயகன்  உண்டு. தலைவன் இல்லாதவன் வி-நாயகன்.


மெய்யா - விமலா.

அழுக்குகள் (மலம்) இல்லாதவனை அறிய அறிவு வேண்டும்.  அவன் ஞானமே வடிவானவன். அந்த ஞானம், அறிவு எப்படி இருக்கிறது.

அறிவு - ஆழமாகவும் இருக்க வேண்டும், அகலாமாகவும் இருக்க வேண்டும், கூர்மையாகவும் இருக்க வேண்டும்.

எனவே, அவனை

"ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்றார் அடிகள்.

ஆழமாக சிந்திப்போம்.

அகலாமாக ,  விரிவாக சிந்திப்போம்.

நுண்மையாக சிந்திப்போம்.


1 comment:

  1. இவ்வளவு எளிமையான பாடல் வரிகளுக்குள் இவ்வளவு அர்த்தங்களா? தமிழ் தெரிந்து இருப்பதற்கு எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறோம்.

    ReplyDelete