Sunday, August 24, 2014

ஆத்திச் சூடி - அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்

ஆத்திச் சூடி - அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் 


இரண்டாம் வகுப்பிலோ மூன்றாம் வகுப்பிலோ படித்தது.

மனப்பாடம் செய்து, ஒப்பித்து, மதிப்பெண்கள் வாங்கி எல்லாம் முடித்து வந்தாகி விட்டது.

இதற்கு மேல் இதில் என்ன இருக்கிறது ?

அறம் செய்ய விரும்பு என்று சொன்ன அவ்வை ஏன் அடுத்த வரியில் ஆறுவது சினம் என்று சொன்னாள் ?

ஆறுவது காமம், ஆறுவது ஆசை என்று சொல்லி இருக்கலாம் தானே ? ஏன் சினத்தை சொல்ல வேண்டும் ?

அறம் செய்யும் போது கோபம்  வரும்.

ஏன் ?

அறம் என்பதற்கு இரண்டு அர்த்தம் சொல்லலாம்.

ஒன்று தானம் செய்வது.

இன்னொன்று தர்ம , ஒழுக்க நெறிப்படி வாழ்வது.

முதலில் தானம் செய்வதைப் பற்றி  பார்ப்போம்.

ஒருவர் தான தர்மம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் உதவி பெற்றவன்  நாலு பேரிடத்தில் சொல்லுவான். அவர்களும் உதவி கேட்டு  வருவார்கள். நாளடைவில் இது ஒரு தொல்லையாகப் போய் விடும். காலம் கெட்ட  நேரத்தில் போன் செய்வார்கள். அடிக்கடி தொடர்பு கொண்டு நச்சரிப்பார்கள். உதவி செய்ய முடியாவிட்டால் , "ரொம்பத்தான் அலட்டிக்கிறான், நெனச்சா செய்ய முடியாதா, அவனுக்கு செஞ்சான், இவனுக்கு  செஞ்சான் எனக்கு மட்டும் செய்யவில்லை " என்று பேசத் தலைப் படுவார்கள்.

ஒரு கட்டத்தில் எரிச்சலும் கோபமும் வருவது இயற்கை.

என்னத்துக்கு தானம் செய்யப் போவானே , இத்தனை பேர் கிட்ட கெட்ட பேர் வாங்குவானே , ஒண்ணும் செய்ய வேண்டாம் என்று நினைக்கத் தோன்றும்.

எனவே பாட்டி சொன்னாள்

"ஆறுவது சினம்"

சினம் ஆறி விடும். நீ தொடர்ந்து "அறம் செய்ய விரும்பு" அறம் செய்வதை வெறுத்து விடாதே என்று சொன்னாள் .

இரண்டாவதை எடுத்துக் கொண்டால்..

அற வழியில் நிற்பவர்களை இந்த உலகம் என்ன சொல்லும் ....

"பிழைக்கத் தெரியாத ஆள்", "அப்பாவி" , " சரியான ஏமாளி" என்றெல்லாம் பட்டம்  கொடுக்கும்.

அவர்கள் மேல் மட்டும் அல்ல, நம் மேலேயே நமக்கு கோபம் வரும்.

நாமும் மற்றவர்கள் மாதிரி கொஞ்சம் அப்படி இப்படி இருந்துவிடலாமா என்று  தோன்றும். அறத்தின் மேல் வெறுப்பு வரும்.

அவ்வை சொல்கிறாள் .... "ஆறுவது சினம்"....நீ தொடர்ந்து "அறம் செய்ய விரும்பு". அதை வெறுத்து விடாதே.


No comments:

Post a Comment