Friday, August 15, 2014

கந்த புராணம் - அயன் ஆரும் உவப்பு உற்றாரோ

கந்த புராணம் - அயன் ஆரும் உவப்பு உற்றாரோ 


சூரபத்மனின் கொடுமையால் அவதிப்பட்ட தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டார்கள்.

திருமால் "சிவன் தவத்தில் இருக்கிறான். அவர் தவம் முடித்து வந்தால், குமார சம்பவம் நிகழும். அவர் தவம் முடிய வேண்டும் என்றால், அது சாதாரண காரணம் இல்லை. மன்மதன் அவர் மேல் மலர் அம்புகளை போட்டால், அவர் தவம் கலையும் " என்று சொன்னார்.

அது கேட்ட பிரம தேவனும், மன்மதனை சிவன் மேல் அம்பு விட  அனுப்பினார்.மன்மதன் மறுத்தான். சிவன் தவம் கலைந்தால், அந்த கோபம் தன்னை என்ன செய்யுமோ என்று பயந்தான். போகாவிட்டால் இப்போதே சாபம் கொடுக்கப் போவதாக பிரமன் மிரட்டவே, வேறு வழியின்றி சென்றான்.

அவன் நினைத்தது போலவே, தவம் கலைந்த சிவன், தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து விட்டார்.

அங்கு வந்த இரதி புலம்புகிறாள்.

திருமாலுக்கு இரண்டு குமாரர்கள். ஒன்று பிரமன், மற்றவன் மன்மதன்.

இரதி சொல்கிறாள், "என் உயிரே நீ இறந்ததால், சொத்தில் ஒரு பங்கு குறைந்தது  என்று பிரமன் மகிழ்வான் " என்று.  நேரடியாகச் சொல்லவில்லை.

பாடலைப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.....

பாடல்

செம் பதுமை திருக் குமரா தமியேனுக்குக் ஆர் உயிரே    திருமால் மைந்தா
சம்பரனுக்கு ஒரு பகைவா கன்னல் வரிச் சிலை பிடித்த தடக்கை வீரா
அம் பவளக் குன்று அனைய சிவன் விழியால் வெந்து உடலம் அழிவு உற்றாயே உம்பர்கள் தம் விழி எல்லாம் உறங்கிற்றோ அயன்
                        ஆரும் உவப்பு உற்றாரோ.

பொருள் 

செம் பதுமை = அழகான சிலை போன்ற

திருக் குமரா = சிறந்த இளையவனே

தமியேனுக்குக் ஆர் உயிரே = எனக்கு ஆருயிரே

திருமால் மைந்தா = திருமால் மைந்தா

சம்பரனுக்கு ஒரு பகைவா = சம்பரன் என்ற அரக்கனுக்கு பகைவனே

கன்னல் வரிச் சிலை பிடித்த தடக்கை வீரா = கரும்பு வில்லைப் பிடித்த வீரனே

அம் பவளக் குன்று அனைய = பவளக் குன்று போன்ற (சிவந்த பெரிய)

 சிவன் விழியால் = சிவனுடைய விழியால்

வெந்து = வெந்து

உடலம் அழிவு உற்றாயே = உடல் அழிந்தாயே

உம்பர்கள் தம் விழி எல்லாம் உறங்கிற்றோ = தேவர்கள் எல்லாம் இந்த கொடுமையைக் கண்டு கண் மூடி இருகிறார்களோ

அயன் ஆரும் உவப்பு உற்றாரோ = பிரமனும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறானோ

கச்சியப்ப சிவாசாரியார் அருளிய கந்த புராணம் படிக்க மிக மிக எளிமையானது. 

நேரம் இருப்பின், மூல நூலை படித்துப் பாருங்கள். 

தெள்ளு தமிழ் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும். 


No comments:

Post a Comment