Friday, August 22, 2014

இராமாயணம் - இராவணன் புறப்பாடு

இராமாயணம் - இராவணன் புறப்பாடு 


சீதை அசோக வனத்தில் இருக்கிறாள். அவளைக் காண இராவணன்  புறப்படுகிறான்.

அவன் எப்படி சென்றான் என்று கம்பர்  கட்டுகிறார்.

அவனைச் சுற்றி பெண்கள் விளக்கு ஏந்தி  வந்தார்கள்.அப்படி விளக்கு ஏந்திய பெண்கள் எப்படி இருந்தார்கள் ? அவர்களே ஒரு விளக்கு போல அவ்வளவு அழகாக ஒளி வீசும்படி இருந்தார்கள். அவர்கள் அழகு ஜொலிக்கிறது. விளக்கே விளக்கை தாங்கி வந்தது போல இருந்தது.

அவர்கள் இடையில் மேகலை போன்ற ஆபரணங்களை சுற்றி இருக்கிறார்கள்.அது ஏதோ பாம்பு அவர்கள் மேல் சுற்றி இருப்பதைப் போல இருக்கிறது.

நாம் நடந்து  போகிறோம்.என்றாவது நம் கையையும், காலையும், இந்த தலையையும் நான் சுமந்து கொண்டு போகிறேனே என்று நினைத்தது உண்டா.  ஆனால்,அந்த கையோ, காலோ அடிபட்டு வீங்கி விட்டால் அது ஏதோ மாற்றுப் பொருளை சுமந்து போவதைப் போல நோகும் நமக்கு.

அந்த விளக்கு ஏந்திய பெண்களுக்கு அவர்களின் மார்புகளை தூக்கிச் செல்வது அவர்களின் இடைக்கு பெரிய பாரமாய் இருந்ததாம்.

அவர்களின் நெற்றி  பிறைச் சந்திரனைப் போல இருந்தது.

ஒரு புறம் இப்படி அழகான பெண்கள். மற்றொரு புறம்,  தவ முனிவர்கள் அவனை வாழ்த , இவர்கள் எல்லோரும் புடை சூழ இராவணன் நடந்து வந்தான். 

பாடல்

‘விளக்கு ஒரு விளக்கம் தாங்கி, மின் அணி அரவின் சுற்றி,
இளைப்புறும் மருங்குல் நோவ, முலை சுமந்து இயங்கும்’
                                           என்ன
முளைப் பிறை நெற்றி வான மடந்தையர், முன்னும்
                                     பின்னும்,
வளைத்தனர் வந்து சூழ, வந்திகர் வாழ்த்த, வந்தான்.

பொருள்

‘விளக்கு ஒரு விளக்கம் தாங்கி = விளக்கே விளக்கை தான்கியதைப் போல

மின் அணி = மின்னல் போல் ஒளி விடும்

அரவின் சுற்றி = பாம்பை போல நெளியும் ஆடைகளை மேலே படர  விட்டிருந்தார்கள்.அந்த மெல்லிய ஆடைகள் அசைவது பாம்பு நெளிவது போல இருந்தது. 

இளைப்புறும் மருங்குல் நோவ = மூச்சு வாங்கி, இடுப்பு நோக

முலை சுமந்து இயங்கும் = தங்கள் மார்புகளை சுமந்து

என்ன = அப்படி இருக்கும் போது

முளைப் பிறை நெற்றி = நிலவு அப்போதுதான் முளைத்து வருவது போல தோன்றிய பிறை நிலவு. அந்த பிறை நிலவைப் போன்ற நெற்றி. பிறை நிலவை முளை விட்ட நிலவு என்ற உவமை இனிமையானது.

வான மடந்தையர் = அப்படிப் பட்ட தேவ மங்கையர்

முன்னும் பின்னும் = முன்னாலும் பின்னாலும்

வளைத்தனர் வந்து சூழ = சூழ வந்தனர்

வந்திகர் வாழ்த்த = வணக்கத்திற்கு உரிய பெரியவர்கள் வாழ்த்த

வந்தான் = வந்தான்.

எவ்வளவு பெரிய  வாழ்க்கை. எவ்வளவு சிறப்பு.

எல்லாம் அழிந்தது.

எதனால் ?

அறம் பிறழ்ந்த வாழ்க்கை நெறியால்.

என்பிலதனை வெயில் போலக் காயுமே
அன்பிலதனை அறம்

அறம் நின்று  கொன்றது.



1 comment:

  1. இந்த மாதிரிப் பாடலைப் படித்தால் ஏதோ சினிமா பார்ப்பது மாதிரி அந்தக் காட்சியே கண் முன் எழுகிறது.

    உன் உதவியால் இதை எல்லாம் படித்து அனுபவிக்கிறோம். நன்றி.

    ReplyDelete