Wednesday, August 20, 2014

இராமாயணம் - இராவணன் சீதை உரையாடல்

இராமாயணம் - இராவணன்  சீதை உரையாடல் 


இராவணனும் சீதையும் எப்படி பேசி இருப்பார்கள்.

சீதை அசோகவனத்தில் இருக்கிறாள். அவளைக் காண இராவணன் வருகிறான். அவளிடம் எப்படி பேசி இருப்பான் ? என்ன பேசி இருப்பான் ? அதற்கு சீதை என்ன மறுமொழி சொல்லி இருப்பாள் ?

சீதையைக் காண வருகிறான் இராவணன்...

அவன் வருவதே அவளை கலக்கியது என்கிறார் கம்பர்

ஒவ்வொரு பெண்ணிடம் ஒவ்வொன்று அழகாக இருக்கும். சிலருக்கு கண்கள், சிலருக்கு புருவம், சிலருக்கு நெற்றி, சிலருக்கு இதழ்கள், இடுப்பு என்று ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று அழகாக இருக்கும்.

சிலபேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அவயங்கள் அழகாக அமைந்து விடலாம்.

உலகில் உள்ள அத்தனை அழகான அவயங்களையும் எடுத்து, அதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி வைத்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தாள் சீதை.

கொஞ்சம் அழகாய் இருந்தாலே நம் ஊர் பெண்களை பிடிக்க முடியாது. இத்தனை அழகு இருந்தால் அவர்கள் மன நிலை எப்படி இருக்கும் ?

ஆனால், சீதையிடம் தான் பெரிய அழகு என்ற ஆணவம் இல்லை, அகந்தை இல்லை...உலகில் உள்ள அத்தனை நல்ல குணங்களும் அவளிடம் இருந்தன.

அழகும், பண்பும் ஒன்றாக இருப்பது எவ்வளவு அபூர்வம்.

அவள் குரல் - இன்னிசை மாதிரி இருக்கும்.

அவள் இதழ்கள் - பவளம் போல சிறப்பு.

அப்படிப்பட்ட சீதையை தன இருபது கண்காலும் கண்டான் இராவணன். அவளுக்குள் ஒரு கலக்கத்தை உண்டாக்கினான்.

பாடல்


பண்களால் கிளவி செய்து, பவளத்தால் அதரம் ஆக்கி,
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின்
                                          ஈட்ட,
எண்களால் அளவு ஆம் மானக் குணம் தொகுத்து
                                   இயற்றினாளை,
கண்களால் அரக்கன் கண்டான், அவளை ஓர் கலக்கம்
                                      காண்பான்.

பொருள்

பண்களால் = இசைப் பாடல்களால்

கிளவி செய்து = கிளவி என்றால் மொழி. சீதையின் பேச்சு இன்னிசைப் பாடல் போல அவ்வளவு இனிமையாக இருக்கும்.

பவளத்தால் அதரம் ஆக்கி = பவளத்தால் இதழ் செய்து. பவளம் பட்டை தீட்ட தீட்ட ஒளி விடும்.


பெண்கள் ஆனார்க்குள் = பெண்கள் என்பவர்களுக்குள்

நல்ல உறுப்பு எலாம் = அழகான உறுப்புகள் எல்லாம் எடுத்து

பெருக்கின் = ஒன்று சேர்த்து, அவற்றை மேலும் மெருகூட்டி

ஈட்ட = செய்து

எண்களால் அளவு ஆம் மானக் குணம் தொகுத்து = எண்ண முடியாத அளவு பெருமை வாந்த குணங்களை தொகுத்து

இயற்றினாளை = செய்தவளை

கண்களால் அரக்கன் கண்டான் = தன் இருபது கண்களால் இராவணன் கண்டான்

அவளை ஓர் கலக்கம் காண்பான் = அவளை ஒரு கலக்கு கலக்கினான்


1 comment:

  1. சீதையின் அழகும் குணமும் என்ன அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன! ஆஹா!

    ReplyDelete