Wednesday, September 3, 2014

திரு விளையாடல் புராணம் - கடலில் சிக்கிய கலம் என

திரு விளையாடல் புராணம் - கடலில் சிக்கிய கலம் என 


ஒரு பிரச்னை என்று வந்து விட்டால், ஒரு தலைவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துக் காட்டுகிறது திருவிளையாடல் புராணம்.

எப்படி இப்படி எல்லாம் அந்த காலத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கும்.

வைகையில் வெள்ளம் வருகிறது.

இப்போது வந்தால் என்ன செய்வோம்...வராது....வந்தால் என்ன செய்வோம் ?

ஏறக்குறைய ஒன்றும் செய்ய மாட்டோம். கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு போகச் சொல்லுவோம், அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவோம், மற்றபடி அந்த வெள்ளத்தை வேடிக்கை பார்ப்போம்.

இது அரசாங்கத்தின் வேலை என்று அவரவர் தங்கள் வேலையை பார்க்கப் போய் விடுவார்கள்.


ஆனால், இங்கே,பாண்டிய மன்னனும் , அமைச்சர்களும், மக்களும் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

பாண்டியன், எல்லா அமைச்சர்களையும்  அழைக்கிறான். இராணுவ அமைச்சர்,நிதி அமைச்சர், உள் துறை அமைச்சர் என்று எல்லோரையும் அழைக்கிறான். அதுவும் ஒன்றாக அழைக்கிறான்.

இதை கவனிக்க வேண்டியது அமைச்சர்களின் வேலை, என்று ஜாலியாக  அந்தப்புரம்  போகவில்லை. எல்லோரையும் ஒருங்கே அழைத்து, வெள்ளத்தினை அடக்குங்கள் என்று கட்டளை இடுகிறான்.  வெள்ளம் வந்து விட்டது, எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்குப் போய் விடுங்கள் என்று அறிவிக்கச் சொல்ல வில்லை.

தெளிவான கட்டளை. "வெள்ளத்தை அடக்குங்கள்".

பாடல்

கருங்க டற்றிரை யிடைக்கி டந்துகழல் கலமெ னக்கன 
                                   முகடளாய்
வரும்பு னற்பரவை யுட்கி டந்துநகர் மறுகி யுட்கமற 
                                  வேலினான்
ஒருங்க மைச்சரை விளித்து நீர்கரை சுமந்தொ துக்கிவரு
                                    மோதநீர்ப்
பொருங்க தத்தினை யடக்கு வீரென வமைச்சருந் தொழுது
                                      போயினார்.

சீர் பிரித்த பின்

கருங் கடல் திரை இடை கிடந்து கழல் கலம் என கன 
                                   முகடு அளாய்
வரும் புனற் பரவையுள் கிடந்து நகர் மறுகி உட்க மற 
                                  வேலினான்
ஒருங்கு அமைச்சரை விளித்து  நீர் கரை சுமந்து ஒதுக்கி வரும் 
                                    ஓத நீர்ப்
பொருங்கதத்தினை அடக்கு வீர் என அமைச்சரும்  தொழுது
                                      போயினார்.


பொருள் 

கருங் கடல் = கரிய கடலின்

திரை = அலை

இடை கிடந்து = இடையே கிடந்து

கழல் = தடுமாறும்

கலம் என = கப்பல் போல

கன முகடு அளாய் = வானத்தை அளாவி

வரும் = வரும்

புனற் = வெள்ள

பரவையுள் = பரப்பில்

கிடந்து நகர் மறுகி உட்க  = கிடைந்து (மதுரை ) நகரம் மறுகி வருத்தம் அடைய

மற வேலினான் = வீரம் பொருந்திய வேலைக் கொண்ட பாண்டிய மன்னன்

ஒருங்கு அமைச்சரை விளித்து = ஒன்றாக அனைத்து அமைச்சர்களையும் அழைத்து

 நீர் = நீங்கள்

கரை சுமந்து ஒதுக்கி வரும் = கரையை தாண்டி ஒதுங்கி வரும்

ஓத நீர்ப்  = பொங்கி வரும் நீரின்

பொருங்கதத்தினை  = பெரிய  வெள்ளத்தை

அடக்கு வீர் என = அடக்குங்கள் என்று கூற

அமைச்சரும்  தொழுது  போயினார். = அமைச்சர்களும் அவனை வணங்கி விடைப் பெற்று சென்றனர்.

அடுத்து அவர்கள் என்ன செய்தார்கள் ?

நம் அமைச்சர்களாக இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்....



No comments:

Post a Comment