Sunday, October 12, 2014

கார் நாற்பது - எழில் வானம் மின்னும், அவர் தூது உரைத்து

கார் நாற்பது  - எழில் வானம் மின்னும், அவர் தூது உரைத்து 


சங்க காலம்.

காற்றாடி (Fan ), குளிர்சாதன (air conditioner , fridge ) போன்றவை இல்லாத காலம்.

வெயில் என்றால் அப்படி இப்படி இல்லை. மரம் எல்லாம் இலைகளை உதிர்த்து விட்டு வானம் நோக்கி கை ஏந்தி மழை வேண்டும் காலம்.

புல் எல்லாம் கருகி விட்டது. மூச்சில் அனல் பறக்கும் காலம்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்கள் நகர்ந்தன.

வெயில் காலம் போய் விட்டது.

கார் காலம் வந்து விட்டது.

வருகிறேன் என்று சொன்னவன் இன்னும் வரவில்லை.

வானம் மின்னல் வெட்டுகிறது. மழைக்கு கறுத்து இருக்கிறது. அது ஏதோ சேதி சொல்வது போல இருக்கிறது அவளுக்கு.

அவன் சொன்ன சேதியை அந்த மின்னல் அவளிடம்  ஏதோ சொல்கிறது  சொல்கிறது.

என்ன என்று அவளுக்குத்தான் தெரியும்....


பாடல்

கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த
நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய்1
இன்னே வருவர் நமரென் றெழில்வானம்
மின்னு மவர்தூ துரைத்து.

பொருள்

கடுங்கதிர் = கடுமையான வெப்பத்தைத் தரும் வெயில் காலம் 

நல்கூரக் = மெலிவு அடைந்து, குறைந்து

கார் செல்வ மெய்த = செல்வத்தை தரும் கார் காலம் வந்தது

நெடுங்காடு = நீண்ட காடு

நேர்சினை யீனக் = அரும்பு விட

கொடுங்குழாய் = வளைந்த ஆபரணங்களை அணிந்தவளே

இன்னே வருவர் = இப்போதே வருவேன் 

நமரென் றெழில்வானம் = நமர் (நம்மவர்) , என்று  எழில் வானம்

மின்னு -= மின்னும்

மவர்தூ துரைத்து =அவர் தூது உரைத்து



1 comment: