Sunday, January 11, 2015

குறுந்தொகை - அருளும் அன்பும் நீங்கி

குறுந்தொகை - அருளும் அன்பும் நீங்கி 


நாலு வரிக்குள் காதலின் பிரிவை, தவிப்பை, ஏக்கத்தை பிரதிபலிக்கும் பாடல் இது.

தலைவன் , பொருள் தேடி தலைவியை விட்டு பிரிந்து சென்று விட்டான். அவனை எல்லோரும் பெருமையாக  பேசுகிறார்கள்.வலியவன், அறிவாளி என்று. இப்படி கட்டிய மனைவியை விட்டு பிரிந்து செல்பவன் பெரிய அறிவாளி என்றால், அவனை விட்டு பிரிய முடியாமல் தவிக்கும் நாம் முட்டாளாகவே இருந்து விட்டு போவோம் என்று அலுத்து சலித்துக்  கொள்கிறாள்.

பாடல்

அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து  
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்  
உரவோ ருரவோ ராக  
மடவ மாக மடந்தை நாமே. 

சீர் பிரித்த பின்

அருளும் அன்பும்  நீக்கித் துணை துறந்து  
பொருள் வயிற் பிரிவோர் உரவோராயின்   
உரவோர்  உரவோர் ஆக  
மடவம ஆக மடந்தை நாமே. 

பொருள்

அருளும் = அருளும்

அன்பும் = அன்பும்

 நீக்கித் = நீங்கி

துணை துறந்து = துணையான என்னை துறந்து
 
பொருள் வயிற் = பொருள் வேண்டி

பிரிவோர் = பிரிந்து சென்றவர்

உரவோராயின் = பெரிய அறிவுடையவராயின்
 
உரவோர்  உரவோர் ஆக = அவர் பெரிய அறிவாளியாகவே இருந்து விட்டுப் போகட்டும்
 
மடவம்  ஆக மடந்தை நாமே.= அறிவற்ற மடந்தையரான நாம் மடந்தையாரகவே இருந்து விட்டு போவோம்

சற்று ஆழமாக சிந்தித்தால் மேலும் சில அர்த்தம் தோன்றும்.  இரசிக்கலாம்.

அன்பு என்பது நம்முடன் தொடர்புள்ளவர்களிடம்  வருவது.

அருள் என்பது தொடர்பு இல்லாதவர்களிடம் கூட வருவது.

நான் ஒரு பெண் என் மேல் அருள் கொண்டு  இருக்கலாம்.

அவரது மனைவி என்று என் மேல் அன்பு கொண்டு இருக்கலாம். 

இரண்டும் இல்லாமல் என்னை விட்டு விட்டு சென்று விட்டார்.

எதற்கு ?

பொருள் சேர்க்க.

குடும்பத்தை விட, பொருள் பெரிதாகப் போய் விட்டது அவருக்கு. 

அவரைப் போய் இந்த உலகம்   நல்லவன்,வல்லவன் என்று சொல்கிறது. 

அப்படிப்பட்ட உலகம் , அவரை போக வேண்டாம் என்று சொன்ன என்னை என்ன சொல்லும் ?

முட்டாள் என்று தானே சொல்லும். 

சொல்லி விட்டு போகட்டும். நான் முட்டாளாகவே இருந்து விட்டு போகிறேன் என்று நொந்து கூறுகிறாள் அவள். 

அவனும்  புரிந்து கொள்ளப்  போவதில்லை. அவனைப் பற்றி யாரிடமாவது சொல்லலாம் என்றால் அவர்களும் அவனுக்கு பரிந்து கொண்டுதான்  பேசுவார்கள். எனக்கு என்று பேசுவதற்கு யாரும் இல்லை என்று அவள் தனிமையில்   புலம்புகிறாள்.

காலம் கடந்தும் அவள் சோகம் இன்றும் நம் மனதை ஏதோ செய்கிறது. 




2 comments:

  1. "நான் தான் முட்டாள் மாதிரிப் புலம்புகிறேன்" என்று சொல்வது போல இருக்கிறது!

    ReplyDelete