Monday, January 12, 2015

திருவாசகம் - ஆனந்த பரவசம் - என் நான் செய்கேன், பேசாயே

திருவாசகம் - ஆனந்த பரவசம் - என் நான் செய்கேன், பேசாயே 


அச்சம். பயம்.

நல்லது செய்யவும் அச்சம். தீயதை விட்டு விலக அச்சம். உண்மையைத் தேட அச்சம்.

நாம் அச்சப் படாத ஒன்று உண்டா இந்த உலகில்.

அஞ்சி அஞ்சி சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை  என்றான் பாரதி. 

புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ள அச்சம். பழைய கருத்துகளை விட்டு விட அச்சம்.

இந்த பிறவியைக் கண்டு அச்சம். பிணி, மூப்பு, மரணம் இவற்றைக் கண்டு அச்சம்.

அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் என்கிறார் மணிவாசகர்.

மேலும்  சொல்கிறார்.

நம்மிடம் இருந்து பொய் முதலில் சிறிதாகத் தோன்றும். நாளடைவில் அதுவே வளர்ந்து பெரிய மரமாகி விடும். விதை போல இருந்த ஒன்று மரம் போல மாறி விடும்.

பொய்யே வாழ்க்கையாகிப் போகிறது. இப்படி இருந்தால் உண்மையை எப்படி கண்டு உணர்வது ? பயப்படுகிறார் மணிவாசகர். 

என்ன செய்வது என்று தெரியாமல் , இறைவனை கேட்கிறார். இறைவனோ பேசாமல் இருக்கிறான். "நீயும் பேசாவிட்டால் நான் என்ன செய்வேன் " என்று வருந்துகிறார் இறைவனிடம். 

பாடல்

விச்சுக் கேடு பொய்க்காகா தென்றிங் கெனைவைத்தாய்
இச்சைக் கானார் எல்லோரும் வந்துன் தாள்சேர்ந்தார்
அச்சத் தாலே ஆழ்ந்திடு கின்றேன் ஆரூர்எம்
பிச்சைத் தேவா என்நான் செய்கேன் பேசாயே.

பொருள்

விச்சுக் = வித்து என்பது விச்சு என்று ஆனது. வித்து என்றால் விதை

கேடு = அழிந்து.

பொய்க்காகா தென்றிங் கெனைவைத்தாய் = பொய்க்கு ஆகாதென்று இங்கு எனை வைத்தாய். அதாவது, பொய் என்பது இந்த உலகத்தில் மறைந்து போய் விடக் கூடாது என்பதற்காக என்னை  அந்த பொய்யின் விதையாக வைத்து இருக்கிறாயா என்று கேட்கிறார்.  அதாவது, எல்லோரும் நல்லவர்களாகி விட்டார்கள். அதனால் இந்த உலகில் பொய் என்பது இல்லாமல் போய் விட்டது. நான் ஒருவன் மட்டும் அதன் விதை போல பொய்யை மீண்டும் மீண்டும்  தோற்றி வைத்துக் கொண்டு இருக்கிறேன் என்கிறார்.

தன்னைத் தவிர மற்ற எல்லோரும் நல்லவர்கள் என்கிறார். என்ன ஒரு பணிவு.

இச்சைக் கானார் = உன்மீது ஆசைப் பட்டோர்

எல்லோரும் = எல்லோரும்

வந்துன் தாள்சேர்ந்தார் = வந்து உன் திருவடிகளை அடைந்து விட்டனர்

அச்சத் தாலே = பயத்தால்

ஆழ்ந்திடு கின்றேன் = மூழ்குகின்றேன்

ஆரூர் = திரு ஆரூர்

எம் = எம்முடைய

பிச்சைத் தேவா = மண்டை ஓட்டில் பிச்சை ஏற்கும் தலைவனே

என்நான் செய்கேன் = நான் என்ன செய்வேன்

பேசாயே. = நீ ஏதாவது பேசு

பொய்யை விடுத்து இறைவன் மேல் அன்பு கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment